ஓயாமல் எழும்பித் தெறித்து உடல் நனைக்கிற கடல் நீர்த்திவலைச் சாரல்களாய், மனம் பெருகும் நேசத்தை, தனித்துக் கனக்கிற நெஞ்சத்துயரை, நினைவில் தளும்பும் சந்தோஷங்களை, இழப்புகளை துளித்துளியான உணர்வுகளாய்ப் பகிர்ந்து கொள்கின்றன இன்பாவின் கவிதைகள். இத்தொகுப்பின் கவிதைகள் இயற்கை சார்ந்த காட்சிப்படுத்தல்கள், தோழிகளிடம் அன்பைப் பரிமாறிக் கொள்கிற, சின்னஞ்சிறு நிகழ்வுகளில் கிடைக்கிற அதியுன்னதமான நிறைவுத் தருணங்கள், தீர்ந்து போகாத உறவின் நேசங்கள் என மிகைபுனைவற்று மகிழ்ச்சியை உள்ளிருத்தி வெளிப்பட்டிருக்கின்றன. தாகமுற்றுத் தவித்துக் கை குவித்து நீரள்ளிக் குடித்து நிறைவுற்று நகர்கிற தொனியில் எதிர்கொள்கிற தனிமைத் தருணங்களை, பகிர்வதற்கு ஆளற்ற துயரங்களை சபித்தல்களோ, அலட்டுதல்களோ இன்றி இவரால் எளிமையாகச் சொல்லிவிட முடிகிறது.