நமது பாரத தேசம் பல மொழிகளைப் பேசுகிற பெரியதோர் உபகண்டம். இந்தப் பெரிய நாட்டில் வாழ்கிற மக்கள் மொழி, நடையுடை, பாவனை, பழக்க வழக்கம் முதலானவற்றில் வேறுபாடுள்ளவராகக் காணப்பட்டாலும் அடிப்படையில் இவர்களிடையே ஒரேவிதமான பண்பாடு ஊடுருவிக் காணப்படுகிறது. தமிழர் தெலுங்கர், மலையாளம், கன்னடர், மராட்டியர், வங்காளர் முதலான பாரத தேசத்து மக்களிடையே ஒரே பண்பாட்டு உறவு தொன்றுதொட்டு இருந்து வருகிறதென்றாலும், சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு இந்தப் பண்பாடு மேலும் ஒன்றி இணைந்து நெருங்கிக் காணப்படுகிறது. பாரத நாட்டில் வாழும் எல்லா மொழியாரும் தம்மைச் சூழ்ந்துள்ள சகோதர மொழியாரோடு நட்புறவு கொண்டு ஒன்றுபட்டு இணைந்து வாழ முனைகின்றனர். ஒவ்வொரு மொழியாரும் தங்களுக்கு அருகில் வாழ்கிற மற்ற மொழியாளரின் பண்பாடுகளை அறிந்து ஒன்றுபட்டு வாழ முயல்கிறார்கள். ஒருவரையொருவர் புரிந்து கொண்டு நெருங்கிப் பழகி நட்போடு வாழ விழைகிறார்கள். இந்த நிலையில் தமிழும் பிற பண்பாடும் என்னும் இந்நூல் வெளிவருகிறது. பன்மொழிப் புலவர் பேராசிரியர் டாக்டர் தெ.பொ.மீ. அவர்கள் தேவையான நேரத்தில், தேவையான இந்த நூலை எழுதியுதவியுள்ளார்கள். தமிழர், தம்மையும் தமக்குப் பக்கத்தில் வாழ்கிற மற்ற மொழியாளரையும் புரிந்து கொண்டு அவர்களோடு ஒன்றுபட்டு இணைந்து வாழ இந்நூல் வழிகாட்டுகிறது.