சாதாரண மனிதர்களாகப் பிறந்த சிலர், தங்களுடைய தீர்க்கமான எண்ணங்களின் மூலமாகவும், அந்த எண்ணங்களில் வெளிப்படும் சொல், செயல்களின் மூலமாகவும் மற்றவர்கள் வணங்கி வழிபடக்கூடிய நிலைக்கு உயர்கின்றனர். அந்த மகான்களின் வாழ்க்கை முறைகளும் சிந்தனைகளும் பிற்காலத் தலைமுறைகள் பின்பற்றக்கூடிய வாழ்வியல் மதிப்பீடுகளாகவும் மாறிவிடுகின்றன.
அப்படிப்பட்ட உன்னதமான நிலைக்கு உயர்ந்த மகான்களின் வரிசையில் வைத்து போற்றப்படுபவர் 'ஸ்ரீ அன்னை'. தன்னை நாடிவரும் அன்பர்களுக்கும் சாதகர்களுக்கும் கருணை ஒளியாக விளங்கும் ஸ்ரீ அன்னையின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் புத்தகம்.
பிரான்சு நாட்டில் பிறந்து வளர்ந்திருந்தாலும் தொடர்ச்சியான ஆன்மிகத் தேடலும், இந்தியத் தத்துவங்கள் மீது ஏற்பட்ட காதலும் ஸ்ரீ அன்னையை இந்தியாவை நோக்கி ஈர்த்து, ஸ்ரீ அரவிந்தரின் ஆன்மிகப் பணியில் ஈடுபட வைத்தது. அதிமனித உருவாக்கத்துக்கு என்று தன் வாழ்நாள் முழுவதையும் அர்பணித்த ஸ்ரீ அன்னை, இன்று அன்பர்களுக்கெல்லாம் அடைக்கலம் தரும் ஆலயமாக உயர்ந்து நிற்கிறார்.
ஸ்ரீ அன்னையினுடைய வாழ்வின் ஆதாரச் சம்பவங்களைக் கொண்டு அழகு தமிழில் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கும் பா.சு.ரமணன், ஸ்ரீ அன்னை அன்பர்களுக்கு அறிவுறுத்திய மலர் வழிபாட்டு முறையையும், அந்த மலர்களை அவரின் பாதத்தில் வைத்து வழிபடுவதன் மூலம் கிடைக்கக்கூடிய நன்மைகளையும் பட்டியலிட்டிருப்பது பக்தர்களுக்கு பயன்தரக்கூடியது.
ஸ்ரீ அன்னை நிகழ்த்திய அற்புதங்கள், பிரார்த்தனைகள், சாதகர்களும் அன்பர்களும் பின்பற்றவேண்டிய தியான முறைகள் மற்றும் ஸ்ரீ அரவிந்தர் எழுதிய 'சாவித்ரி', 'ஸ்ரீ அன்னை' போன்ற புத்தகங்களின் சாராம்சங்களையும் இணைத்திருப்பது இந்தப் புத்தகத்தின் சிறப்பு.
மேலும், அன்பர்களின் ஆன்மிக வாழ்வோடு உலக வாழ்வையும் முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு உருவாக்கிய ஆரோவில் நகரத்தையும், அங்கே கடைப்பிடிக்கப்படும் வாழ்வியல் நெறிமுறைகளையும் விளக்கியிருப்பது, ஸ்ரீ அன்னையின் ஆதார நோக்கத்தையும் அறிந்துகொள்ள உதவுகிறது. தியாக வாழ்வு வாழ்ந்த ஸ்ரீ அன்னையின் ஆன்மிகச் சுவடுகளைப் பின்பற்றி இறை ஒளியில் இளைப்பாறுவோம்.