ஒவ்வொரு விதைக்குள்ளும் கோடான கோடி விதைகள் உள்ளடங்கியிருக்கும் அற்புதத்தைத் தன்னுள் அடக்கி இருப்பதுதான் இயற்கை. இதனாலேயே, மகாகவி பாரதி “எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா! இறைவா!” என்றார். அணுமுதல் அண்டம் அடங்க ஒவ்வொன்றுமே முரண்பட்ட நிலைமையில் இருந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன. வியக்கத்தகுந்த முரண்பட்ட இந்த இயங்கியலின் ஊடாக ஒவ்வொன்றுமே தொடர்ந்து இருந்துவருகின்றன. இது ஓயாத மாறுதல் களுக்கு உள்ளாகி வருகிறது. இதனாலேயே “மாறுதல் என்பதுதான் மாறாதது” என்றார் காரல் மார்க்ஸ். இந்த இயற்கை சார்ந்த அறிவியலை அடையாளம் காண வரலாற்றில் காரல்மார்க்ஸ் வரை மாமனிதர்கள் நெடும் பயணத்தை மேற்கொள்ளவேண்டியிருந்தது. அதன் விளைவாக, இயற்கைக்குள் உள்ளடங்கியிருக்கும் மனிதனின் பயணம் வரலாற்றில் மிகுந்த அளவுக்கு வேகமடைந்தது.