இந்தியாவின் இதயத்துடிப்பு கிராமங்களில் தான் இருக்கிறது என்பார் காந்தியடிகள். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைவது அந்நாட்டின் கிராமப் பொருளாதாரமான விவசாயத் தொழிலே. எனவே தான் வள்ளுவரும் 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றோரெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்' என்று உழவுத் தொழிலின் மேன்மையை வலியுறுத்துகிறார். உலகம் என்னதான் கணினி மயமானாலும், உழவன் சேற்றில் கை வைத்தால்தான் மற்றவரெல்லாம் சோற்றில் கைவைக்க முடியும். இத்தகைய உழைப்பாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொங்கு வட்டார நாவல்களைப் படைப்பதில் சண்முக சுந்தரத்திற்கு அடுத்தபடியாக சூரியகாந்தனின் படைப்புகள் சிறப்பானதொரு இடத்தைப் பிடித்துள்ளன. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த உழைப்பாளிகளை மையமாகக் கொண்டு சூரியகாந்தன் படைத்துள்ள 'பூர்வீக பூமி' (1995) வட்டார நாவல் உலகில் ஒரு தனி முத்திரையைப் பதித்துள்ளது என்றால் அது மிகையாகாது.