எழுச்சிக் கதைகள் ; தமிழ் நாட்டில் கவிஞர் பெருமக்கள் பலர் இடையீன்றித் தோன்றிப் பேரும் புகழும் பெற்று
மொழிக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளனர். புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் அடியொற்றி பட்டுக்கோட்டையார்,
தமிழ்ஒளி ஆகியோர் வரிசையில் புதுவை நாராயணசாமி அவர்களும் தற்காலக் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர்
ஆவர். அவர் நேர்மையான அரசியல் விரும்பி, போராட்டங்கள் பல கண்டவர் சமூக்க் கவிஞர், தொழிலாளர் நலன்
போற்றுபவர். அவர் தான் வாழ்ந்தகாலத்து நிலைமைகளை வெளிப்படுத்தும் வண்ணம் பாடிய கவிதைகளை 'எழுச்சிக்
கவிதைகள்' என்ற பெயரில் வெளியிடப்படுகின்றது. அண்ணன் , எரிப்பதில் வல்லவன் ' குளிர் அள்ளித்தருவதில் நான்
நல்லவன்' என்று நிலவொளி வீசும் சந்திரன் கூறுவதாகப் பாடித் தன் இயற்கை மீது கொண்டபற்றை நயமாக்க்
குறிப்பிடுகிறார். கடமை புரிவதில் கண்ணும் கருத்தும் தேவை என்பதை வலியுறுத்தும் போது கடமை தவறின்
வெந்திடுவோம் , காலம் மறந்தே நொந்திடுவோம் என்று எச்சரிக்கின்றார். பெண் இனம் போற்றப்படவேண்டும் என்ற
கொள்கையை , பெண் இனம் நாட்டின் கண், கண்களைப் போல் அவர்களைக் காக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
- பதிப்பகத்தார்.