தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்; தமிழ்ச் சமூகப் பண்பாட்டு ஆய்வுகளில் மார்க்சிய முறையியல் கையாளுகையை வளர்த்தெடுத்தவர் நா. வானமாமலை. அவர் மார்க்சிய நோக்கில் தமிழ்ச்சமூகப் பண்பாட்டு வரலாற்றை அறிந்து கொள்வதற்கும், அறிவிப்பதற்குமாகத் தம் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டவர். இதன் தொடக்கமாக அமைந்தது' தமிழ்நாட்டுப்பாமர்ர் பாடல்கள்' என்ற தொகுப்பு. இந்நூலிலுள்ள நா.வா.வின் முன்னுரை அவர்தம் பணிகளை எவ்வாறு பரந்த நோக்கத்துடன் திட்டமிட்டுக் கொண்டார் என்பதைப் புலப்படுத்தும். இச்சிறு நூல் மிகக் குறுகிய காலத்தில் விரிவாக்கம்பெற்று தமிழர் நாட்டுப் பாடல்கள்' என்னும் பெருநூலானது. இந்நூல் தமிழ் நாட்டுப்புறவியல் ஆய்வுகளுக்கு மிகச்சிறந்ததொரு மூலாதாரச் சான்று நூலாக விளங்குகிறது. நாட்டார் வழக்காற்றியல் அல்லது நாட்டுப்புறவியல் என்னும் தமிழ் அறிவுப்புலம் நா.வா.வின் இணையற்ற உழைப்பால் உதித்தெழுந்தது. நா.வா.வின் நேரடி மாணவர்களாகிய 'ஆராய்ச்சி ' குழுவினரும் நா.வா.வின் ஆய்வுத்தாக்கத்தால் உருப்பெற்ற தமிழில் மார்க்சிய ஆய்வுக்குழாத்தினரும் இணைந்து தமிழியல் ஆய்வில் புதிய மலர்ச்சியை உருவாக்கியுள்ளனர். தமிழியல் ஆய்வு மாணவர்களின் தேவையின் பொருட்டும், தமிழ் சமூகப் பண்பாட்டு அறிதலில் அக்கறை கொள்ளும் பொதுவாசகர் தேவையின் போருட்டும் இந்நூலை மீளச்சிடுகிறோம்.
-பதிப்பகத்தார்.