சிற்றூர்களுக்கான வளர்ச்சித் திட்டத்தின் கீழ்த் தாமரைக் குளத்தில் அமைக்கப்பட்டிருந்த கிராம சேவா தளத்தின் அலுவலகத்தில் ஒரு பகுதியைச் சுகுணாவுக்கு வீடாக ஒழித்துக் கொடுத்திருந்தார்கள். சுற்றிலும் பெரிய தோட்டத்தோடு கூடிய பழைய கட்டிடம் அது. சுகுணாவின் சேவாதளத்தில் அவளுடைய கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு வேலை செய்ய நான்கு பெண் ஊழியர்களும், இரண்டு இளைஞர்களும், கிராமத்துத் தொண்டர்களாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். எல்லாருக்கும் சுற்றிப் பார்த்து அலுவல் புரிய வசதியாக சைக்கிள் கொடுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொருவருக்கும் நான்கு கிராமங்களாக வேலை பொறுப்புக்கள் பிரித்து விடப்பட்டிருந்தன. ஆனால் கிராமத் தொண்டர்களாக நியமிக்கப்பட்டிருந்த பெண்களும், ஆண்களும், சைக்கிளில் ஏறி மாந்தோப்புக்கும், தென்னந்தோப்புக்கும் உல்லாசப் பயணம் போவதுபோல் போய் இளநீரும், மாம்பழமும் சாப்பிட்டுவிட்டு ஊர் வம்பு பேசித் திரும்பிக் கொண்டிருந்தார்கள். அவர்களால் உருப்படியாக ஒரு வேலையும் நடைபெறவில்லை. முதியோர் கல்விப் பள்ளிக்கூடமென்று கட்டப்பட்டு இருந்த ஓட்டுக் கட்டிடங்களின் உட்பக்கம் மண் தரையில் எருக்கஞ்செடியும், எமப்பூண்டும் முளைத்திருந்தன. அரசாங்கத்திலிருந்து பண உதவிபெறும் கோழிப் பண்ணைகளில் கசாப்புக் கடைக்கு அனுப்புவதற்கான ஆடுகளை வளர்த்துக் கொண்டு கோழிகள் வளர்ப்பதாக ஏமாற்றி மான்யம் வாங்கிக் கொண்டிருந்தார் வடமலைப் பிள்ளை. இப்படி எத்தனையோ நடந்து கொண்டிருந்தது. தெரிந்தும் நடந்ததும், தெரியாமலும் நடந்தது.