அக்டோபர் மாதம் இந்திய சுதந்திரத்திற்கும், நாட்டின் மேம்பாட்டிற்கும் ஒரு பெரிய புண்ணிய காலம் என்றே சொல்ல வேண்டும். இந்திய நாட்டிற்காகச் சேவை புரிந்த ஒப்புயர்வற்ற பலர் உதித்த சிறந்த மாதம் இதுவென்றே தோன்றுகிறது. அண்ணல் காந்தியடிகள் அக்டோபர் இரண்டாம் நாள் உதித்தது உலகம் அறிந்த ஒன்று. பெருந்தலைவர் என்றும், கர்ம வீரர் என்றும் போற்றப்பட்ட காமாராஜரின் நினைவு நாளும் இந்த இரண்டாம் திகதியே. இவர்களிருவர் தவிர, சுதந்திர இந்தியாவின் இரண்டாவது பிரதமராகப் பதவி வகித்து, நேருவின் குடும்பமல்லாத ஒருவர் நாட்டைத் திறமையுடன் ஆண்டு, அண்டை அயல் நாடுகளிடம் இந்தியத் திருநாட்டிற்கென ஒரு மரியாதையை உருவாக்கிய லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் பிறந்த தினமும் அதே அக்டோபர் இரண்டாம் திகதிதான். இவர்கள் மூவரையும் குறித்து, பனிப்பூக்களில் ஏற்கனவே கட்டுரைகள் வரையப்பட்டுள்ளன. இவர்கள் தவிர்த்து, ”வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று அனைத்து உயிர்களிடத்தும் அன்பு போதிக்கும் உயரிய ஜீவகாருண்யத்தை உலகுக்கு அளித்த ராமலிங்க வள்ளலார் தோன்றியதும் அக்டோபர் ஐந்தாம் திகதி ஆகும். இவர் குறித்து, இன்னொரு முறை பார்க்கலாம்.
அதே அக்டோபர் முதல் வாரத்தில், அதாவது அக்டோபர் நான்காம் திகதி, இந்தியத் திருநாட்டில், தமிழ் மண்ணில், அன்றைய மதுரை மாகாணத்திலிருந்த திண்டுக்கல் நகருக்கு அருகாமையிலுள்ள வத்தலகுண்டு எனும் கிராமத்தில் தோன்றி, இந்திய சுதந்திரத்திற்காக எவராலும் எண்ணிப் பார்ப்பதற்கரிய அரும் தியாகங்கள் புரிந்த சுதந்திரப் போராட்டத் தலைவர் திரு. சுப்பிரமணிய சிவா குறித்து வரையப்படுகிறது இந்தக் கட்டுரை.