தமிழ்மொழி குறித்த சிந்தனையோடு இந்திய மொழிகளின் எதிர்கால நிலை குறித்த சிந்தனைகளும் இடம்பெற்றுள்ளன. இந்நூல் 25 கடிதங்களைக் கொண்டுள்ளது. நூல் எழுதப்புகுமுன் மூன்று முத்தான கருத்துகளை முன் வைத்து நூலைத் தொடங்குகிறார். அவற்றில் உடன்பாடு உள்ளோரே மேற்கொண்டு தன் கடிதத்தைத் தொடரவேண்டும் என்று தெளிவுறுத்துகிறார். அவை,
1. வன்முறை எதற்கும் என்றும் எவரும் கையாளக்கூடாது.
2.பாரதத்தின் ஒருமை பாழ்படக்கூடாது.
3.அடிப்படை உரிமையில் ஏற்றத்தாழ்வு கூடாது.
என்பதுவேயாகும்.
இந்தி மட்டுமே பொதுமொழி என்ற நிலை மாற வேண்டும் என்பதையும், ஆங்கிலத்தின் துணை இன்றி முன்னேற முடியாது என்றாலும், ஆங்கிலத்தைப் பொது மொழியாக்காது அதற்கு நிலையான பரந்த நல்லிடம் அளிக்க வேண்டும் என்றும் கூறி, தனது மொழிக் கொள்கைகளை இந்நூலில் ஆழமாக விவரித்துள்ளார். இறுதியாக "இந்திய அரசாங்கம் இந்திய மொழிச்சிக்கலைத் தீர்த்து தேசிய இனங்களின் வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டும்.
இது இன்று கூர்மையாகிக் கொண்டிருக்கும் மொழிச்சிக்கல் எதிர்காலத்தில் பெரிய மொழிப்போராக வெடிக்காமல் இருப்பதற்கான வழியாகும் என்பதைப் புரிந்து செயல்படவேண்டும்" என்று கூறுகிறார்.