தமிழ் மொழி இலக்கணச் செறிவுள்ளது சான்றோர்கள் பலர் தங்கள் நூல்
வாயிலாக தமிழுக்கு அணிசேர்த்து அழகு செய்துள்ளனர். அவ்வழியைத்தான்
நூலாசிரியரும் பின்பற்றியுள்ளார். அ முதல் அஃகு வரை என்பதைப்போல
இயற்கையமைப்பின் தோற்றம் முதல் மானிடம், மருத்துவம் அதன் மகத்துவம், இயற்கை
உணவு, அளவுகள் என, பல முத்துக்களைக் கோர்த்து அணி செய்துள்ளார். அறியாத
செய்திகளை அணிவகுத்து எழுதுவது சிறப்பு எனினும், அறிந்த செய்திகளை சிறப்பாக
எளிய நடையில் எடுத்தியம்பியுள்ளார்.
இயற்கை உணவுகளின் சிறப்பியல்புகளை எல்லோரும் அறிந்ததே.
எனினும் அதனை மறந்து ஒவ்வாத உணவுப்பழக்கங்களை மேற்கொண்டு நோயாளியாவது
இன்றையநிலை, இயற்கை உணவின் நிறைகளைக் கூறுவது இத்தருணத்தில் சாலச்சிறந்தது.
மேலும் அதற்கான சூழல் சீர்கேட்டைத் தவிர்க்கலாம். உணவு உண்ணும் முறை
குறித்து, 'நொறுங்கத் தின்றால் நூறு வயது வாழலாம், மெல்லாத உணவு செல்லாது'
என்பதை மேற்கோளாகக் காட்டியுள்ளார்.
உயிர்ச்சக்தி, புலனடக்கம் ஆகியவற்றின் மேன்மையை
உணர்த்தியுள்ளார். ஆரோக்கிய மணிமொழிகள் அளவில்லா அற்புதம். அண்டம், பிண்டம்
ஆகியவற்றை ஒப்பு நோக்கி, இதுதான் உடல் என உணர்த்தியுள்ளார். நீர்
மருத்துவம், தூய்மையான நீர் எவ்வாறு இருக்க வேண்டும்?, நீரைப் பருகும் முறை
ஆகியன எல்லோரும் அறிய வேண்டிய ஒன்று.