கல்வெட்டைப்பற்றி: காலத்தைச்சொல்வது கவிதை; காலத்தைக் கடந்து நிற்பதும் கவிதை, கவிதைக்கு நினைப்பு தேவை. அதைக் கல்வெட்டாகத் தரவேண்டும் என்ற கவனம் தேவை.
இதனை, "இந்தக் கல்வெட்டில்"... கவிஞர் தென்னவன் செய்திருக்கிறார்.
பொதுப்படையாகச் சொல்லிவிட்டால், இதுவரை வந்தவர்கள் சொன்னவைதாம் என்று ஒதுக்கப்பட்டுவிடும். குறிப்பிட்டுச் சொன்னதால் கவிஞன் எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
சுட்டு இருக்க நேயர் விருப்பமாகச் சொன்னால் சார்பு தோன்றும்.
இவை கவிஞனுக்குப் போடப்படும் சிறைகள், ஆயினும் இத்தொகுப்பில் சிற்சில இடங்களில் சிறை கம்பிகளை உடைத்த வேகம் புலப்படுகிறது.
அரசியல்வாதிகளைச் சுட்டிக்காட்டும்போது சில நேரம் அங்கதம் தேவைப்படுகிறது. இங்கே காவிகளின் பகல் வேஷம் பற்றிச் சொல்லும்போது,
புயல்களிடம்
கைகுலுக்கிப்
பூக்களை அறுவடை செய்து
மதவெறியை
விளைச்சல் செய்யும்
விவசாயிகள்
என்று குறிப்பிடும் போதும்,
காதல் நிறைவேறுவதற்காக 'ரதம்' ஏறச் சொல்கிறார் காதலர்களிடம். அயோத்தி செல்வதற்காக அல்ல. அவரவர் பெற்றோர்களிடம் காதலைச் சொல்ல. என்ற நிலையிலும் அங்கதம் தொனிக்கிறது.
குடிசைக் கவிஞர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் கவிஞர் நூற்றாண்டுகளைக் கடந்தும் மக்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் சான்றோர்களைப் போற்றுகிறார்.