வீரம் விளைந்த பாண்டிய நாட்டின் வித்தகர்களில் ஒருவராக விளங்கியவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை. புறநானூற்று வீரம் போற்றும் வீரச் சிங்கமாகப் பிறந்தவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை. “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்ற தொண்டு ஞானத்துக்குத் தொண்டராகத் தோன்றியவர் மாவீரர் வ.உ.சி! வடநாட்டுத் தேசிய செருகளத்துப் போர் முனைக்கு ஒரு திலகர் வாய்த்தாரென்றால், தென்னாட்டுத் தேசியத்துக்கு சுதந்திர உணர்ச்சியை ஊட்டி வளர்த்த தந்தையாக நடமாடிய தன்மான வீரர் வ.உ.சி இல்லையென்றால், “எங்கள் மன்னன் திலகர் உயிருடன் இருந்திருந்தால், இந்தப் பேடித்தனமான ஒத்துழையாமைத் திட்டத் தீர்மானத்தைக் கொண்டு வர இந்தக் காந்தி துணிவாரா?” என்று, கல்கத்தாவில் நடைபெற்ற அகில இந்தியத் தேசியக் காங்கிரஸ் மகா சிறப்புச் சபையில் காந்தி பெருமானை நேருக்கு நேராகக் கேட்ட அஞ்சா நெஞ்சராக சிதம்பரம் இருந்திருப்பாரா? வ.உசிதம்பரத்தின் இந்த உட்கட்சிப் போர் முழக்கம் கேட்ட காங்கிரஸ் மாநாடே திணறியது! இதை விட வேறு சான்று என்ன வேண்டும், ஒரு மாவீரனின் அரசியல் ஆண்மைக்கு? அரசியல் அறப்போரோ, அல்லது மறப்போரோ, அவை எதுவானாலும் சரி, சாம, பேத தான, தண்டம் என்ற நான்கு யூகங்களையும் சமயத்துக்கேற்றவாறு வியூகங்களாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, சத்தியம், சாந்தம் என்கின்ற வைதீக மனப்பான்மைகள், விடுதலைப் போர்க்களத்திலே நல்ல, அமைதியான, வெற்றிகளைத் தேடிக் கொடுக்காது. என்ற மராட்டியச் சிங்கமான திலகரின் கொள்கைகளுக்குத் தமிழ் நாட்டின் வாரிசாக வாய்த்தவர் வ.உ.சிதம்பரனார்!