அந்த லெட்டரைப் பார்த்துப் பார்த்துப் பெருமூச்சு விட்ட பாலு, அத்துடன் அவள் கொண்டு வந்த ஓவியச் சுருளையும் பிரித்துப்பார்த்தான். அந்த ஓவியத்தில், அந்த இராணுவ வீரர், தலையில் தொப்பியுடன், கையில் துப்பாக்கியுடன், கம்பீரமாக இராணுவ உடையில் கொடி வணக்கம் செய்கிறார். வலது புற பேண்ட் பகுதியில் மட்டும், பானு நிற்பது போன்ற படம், குழந்தை கீதாவைக் கைப்பிடித்தவாறு, வரையப்பட்டுள்ளது. அந்த ஓவியத்தில், வலது காலை இழந்த அந்த இராணுவ வீரருக்கு, பானுவும் காதாவுமே அவரைக் கீழே விழாமல் தாங்கிப்பிடித்து வரும் அஸ்திவாரத் தூண்கள் போல இருப்பதாகச் சித்தரிக்கப்பட்டிருந்தது. அந்த ஓவியம் உண்மையிலேயே மிகவும் அருமையாகப்பட்டது, பாலுவுக்கு. மனித நேயம் என்ற மகத்தானதொரு தத்துவத்தை விளக்கும் அந்தச் சித்திரத்தை, சிறிதும் சிதைக்க விரும்பாமல், அவர்களிடம் விடை பெற்றான் பாலு. அவர்கள் ஒருவருக்கொருவர் என்னதான் நட்புடனும் பாசத்துடனும் பழகினாலும், ரத்த சம்பந்தமே இல்லாத அவர்களின் உறவு பாலுவைப் பொறுத்தவரை வர்ணம் தீட்டப்படாத ஓவியங்களாகவே தோற்ற மளித்தது.