மகாபாரதம் என்பதே குருகுலத்தவருக்குள் நடந்த போர் பற்றியது மட்டுமே என்பது பொதுப் புரிதல். ஆனால், குருகுலத்திற்கும், சுற்றியுள்ள சூழலுக்குமான போராட்டங்கள் இக்கதையில் மையப்படுத்தப்பட்டுள்ளன. தனக்கு நடக்கும் அநீதியைத் தாங்கிக் கொள்ள நேரும் பெரும்பாலான மனிதர்கள், தங்களின் கொதிப்பை எல்லாம் தனக்குக் கீழிருப்போர் மீது மடைமாற்றுவார்கள். இதுவே நம் குடும்பங்களுக்குள் நடக்கும் பெரும்பாலான துயரங்களின் மூலப்புள்ளி. மாறாக இக்கதையின் நாயகியோ தனக்கு ஏற்பட்ட துயரங்கள் வேறெவருக்கும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதையே நோக்கமாகக் கொண்டவள்.