எழுபது ஆண்டுகளுக்குமுன் வீட்டுக் கதவைத் தட்டிய, ஊர்பேர் தெரியாத
விருந்தாளி சிந்திய இரத்தத்திற்காக மூன்று தலைமுறைகளாக நீளும் சங்கிலித்
தொடரான பழிவாங்கல் நாடகத்தைப் புராதன கானூன் சாத்திர விதி ஜார்க்கின்
குடும்பத்தில் துவக்கிவைக்கிறது. தன் முறைக்கான பழிவாங்கலை
முடித்துவிட்டுத் தான் சுடப்படும் ஏப்ரல் கெடுவிற்காகக்
காத்துக்கொண்டிருக்கும் ஜார்க், சாவின் ராச்சியத்திற்குள் பிரவேசிக்கும்
எழுத்தாளர் பெஸ்ஸியனின் மனைவி டயானாவைச் சந்திக்கிறான். சாவதற்குள் அவளை
மறுபடிச் சந்தித்துவிடும் ஒரே ஒரு வாய்ப்பிற்காகத் தனக்கான காலக் கெடுவை
மீறுகிறான். மறுபுறம் டயானாவும் தனக்கு விதிக்கப்பட்ட இடம் சார்ந்த
வரையறையை மீறுகிறாள், ஜார்க்கைச் சந்தித்துவிடும் ஒரே ஒரு வாய்ப்பிற்காக.
வடக்கு அல்பேனியாவைக் களமாகக் கொண்ட இந்த நாவல், அங்கு நூற்றாண்டுகளாக
நிலவும் இரத்தப் பழி மரபைப் பின்னணியாகக் கொண்டது. இஸ்மாயில் கதாரேயின்
இந்த நாவல் 2001இல் ‘Behind the Sun" என்னும் பெயரில்
திரைப்படமாக்கப்பட்டுச் சில விருதுகளையும் பெற்றிருக்கிறது.