உணர்வுகளின் அடிமை!
நம் உணர்வுகள் நம்முடைய செயல்பாடுகளைத் தீர்மானிக்கின்றன. எந்த நேரத்தில் எந்த மனநிலையில் எதை உணர்கிறோமோ அப்படித்தான் செயல்படவும் செய்கிறோம்.
கோபமான நேரத்தில் மற்றவர் மீது எறிந்து விழுகிறோம். மகிழ்ச்சியான உணர்வின்போது நம்முடைய சந்தோஷத்தை மற்றவர்களிடத்தில் பகிர்ந்துகொள்கிறோம். அதேபோல, வெறுப்பு, சோம்பல், குற்ற உணர்வு, கவலை, பயம், மன அழுத்தம் என்று நம்முடைய ஒவ்வொரு மன நிலைகளின் போதும் அதற்கேற்ற உணர்வுகள்தான் வெளிப்படுகின்றன.
இப்படி சிலநேரங்களில் சில உணர்வுகளுக்கு அடிமையாகவும் செய்கிறோம். அந்த உணர்வைக் கொண்ட மனநிலை என்ன நினைக்கிறதோ, அதைச் செயல்படுத்துகிறோம். ஒழுங்குமுறை, கட்டுப்பாடு, தெளிவு இல்லாமல் காரியம் ஆற்றுகிறோம். இதனால் நிகழப்போகும் பின்விளைவுகளைப் பற்றிச் சிந்திப்பதில்லை.
அதனால், பல சிக்கல்களை, தர்ம சங்கடங்களை சந்திக்க நேரிடும்போதுதான், 'ஐயோ! இப்படி ஆகும் என்று எனக்கு அப்பவே தெரியாமல் போய்விட்டதே... அஜாக்கிரதையாக இருந்து விட்டேனே... கொஞ்சம் சுதாரித்து இருந்தால், இப்படி நடந்திருக்காதே!' என்று கையைப் பிசைந்துகொண்டு நிற்போம்.
இப்படி, தரிகெட்டு ஓடும் மனதுக்கு கடிவாளம் போடுவது எப்படி என்று அழகான தமிழ் நடையில், இயல்பாக புரியும்படி எழுதியிருக்கிறார் நூலாசிரியர் டி.ஐ.ரவீந்திரன்.
மனதை ஒருநிலைப்படுத்தி மன உணர்வுகளைச் சமாளித்து சுய முன்னேற்றத்துப் பாதையிட்டு, பண்படுத்தும் பயனுள்ள நூல் இது!