சுதேசமித்திரன் 'ஞாயிறு மல'ரில் ஆசிரியராயிருந்த காலத்தில் இரண்டு
குறுநாவல்களை எழுதும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அந்தக் குறுநாவல்களில்
இரண்டாவது இந்த இளைய ராணி. ஆறு அத்தியாயங்கள் கொண்ட இளைய ராணியும், நான்கு
அத்தியாயங்கள் கொண்ட உதயபானுவும் ஒரே புத்தகமாக அமுத நிலையத்தாரால்
ஆரம்பத்தில் வெளியிடப்பட்டது. ஆரம்ப காலத்தில் மிகச் சுருக்கமாக எழுதிவிட்ட
இந்த இரண்டையும் விரிவுபடுத்த வேண்டும் என்ற அவா நீண்ட நாளாக இருந்த
போதிலும் அவகாசமில்லாததால் எழுதவில்லை . பின்னர் 'ராணி முத்து'
காரியாலயத்தார் இந்த இரண்டு கதைகளையும் வெளியிட அனுமதி கேட்டபோது அந்த
வாய்ப்பை உபயோகப்படுத்தி இவற்றைச் சிறிது விரிவுபடுத்தினேன். அதன் விளைவாக
இரண்டு குறுநாவல்களும் இப்பொழுது தனித்தனி நாவல் களாக வெளிவருகின்றன.
இரண்டு கதைகளும் ராஜபுதன சரித்திரத்தின் அடிப்படையில் புனையப் பட்டவை.
முக்கியமாக ஒளரங்கசீப்பின் வல்லரசு ஆட்டங்கண்ட காலத்தில் நிகழ்ந்த இரண்டொரு
சம்பவங்களை வைத்துக் கொண்டு இக்கதைகள் எழுதப்பட்டன.
- சாண்டில்யன்