பேரறிஞர் அண்ணா பிறந்த போது, தேவர்கள் வானத்திலிருந்து மலர்மாரி பொழியவில்லை; தேவதுந்துபி இசை முழங்கவில்லை; முப்பத்து முக்கோடி தேவர்களும் கூடி வந்து “வாழ்க! வாழ்க!” என வாழ்த்துக்கள் வழங்கவில்லை. பிறந்த குழந்தையின் தலைக்கு மேலே நாகம் படம் விரித்துக் குடை பிடிக்கவில்லை; அற்புதங்கள் எதுவும் நிகழாமலேயே எளிமையாக எல்லாக் குழந்தைகளும் பிறப்பது போலத்தான் அண்ணா பிறந்தார். ஆனால் அவர் வளர வளர மனித நேயம் மதநல்லிணக்கம், வாய்மை, தூய்மை, தாய்மை, நேர்மை ஆகிய அரும்பண்புகளும், கூரிய அறிவும், சீரிய சிந்தனையும் அவரிடம் சேர்ந்து வளர்ந்தன. அவர் தெய்வத்தை வணங்காதவராக வாழ்ந்த போதும் தமிழ் மக்கள் அனைவரும் அவரையே தெய்வமாகக் கருதி வணங்கத்தக்க நிலைக்கு அவர் உயர்ந்தார்.