காய்கறிகளை உண்ணக் குழந்தைகள் செய்யும் அட்டகாசங்கள் கொஞ்சநஞ்சமல்ல அவர்களை அனைத்தையும் ஒருங்கிணைத்து உண்ணக் கற்பிப்பதும் அவசியமாகிறது. காய்கறிகளின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வின்மையே இதற்குக் காரணம். அறிவியல் பாடநூல்கள் வயதுக்கு ஏற்றவகையில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் என்ன? அவை எந்தெந்த வகைகளில் பெற இயலும்? என்பதை போதிக்காமல் இல்லை. இருந்தும் எந்த அளவுக்கு இது சென்று சேர்கிறது என்பதும் கேள்விக்குறியே. அதே நேரம் வறுத்துப் பொறித்து நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க பலவகையான வேதிப்பொருட்களையும் சேர்த்து சிறுசிறு பொட்டலங்களில் அடைத்து பல உணவுப்பொருட்களும் விற்கப்படுகின்றன. இவ்வாறான துரித உணவுப் பொருட்களை பல குழந்தைகளும் விரும்பி உண்கின்றனர். இவற்றை உண்டு ஓடி ஆடாமல் ஒரே இடத்தில் அமர்ந்து செல்லிடப்பேசிகளிலும், தொலைக்காட்சிகளிலும் மூழ்குவதால் பல குழந்தைகளின் உடல்பருமனும் கூடுகின்றது. கரோனா காலகட்டம் இப்பிரச்சனையை மேலும் கூட்டியுள்ளது.