தீரச் செம்மல்கள்
இன்று உள்ளங்கைக்குள் உலகம் வந்து விட்டது. ஆனால், மனித இதயத்துக்குள்தான் தியாக உணர்வு அருகிவிட்டது. தேசிய உணர்வையும், சமூக ஒற்றுமை உணர்வையும் இன்றைய இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்லி, வழிநடத்தும் போக்கு குறைந்து வருகிறது.
இந்த தேசத்துக்காக - இந்த நாட்டு மக்களுக்காக தங்கள் பெற்றோர், மனைவி, பிள்ளைகளைப் பிரிந்து, எல்லைப் பகுதியில் கடுங்குளிரிலும் பனி மலையிலும் காத்து நின்று, தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது, வீரதீர சாகசங்கள் புரிந்து, தேசத்தையும் மக்களையும் காக்கும் மாவீர்ர்களை நாம் எளிதில் ஒதுக்கி விடுகிறோம்.
இந்தியாவின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ஆக்கிரமித்த சமயங்களிலும், கார்கில் போரின்போதும், டெல்லியில் தொடர் வெடிகுண்டு வெடித்தபோதும், நாடாளும்ற வளாகத்துக்குள் தீவிரவாதிகள் நுழைந்து தாக்கியபோதும், மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தையும், தாஜ் ஹோட்டலையும் தீவிரவாதிகள் தாக்கியபோதும்... அத்தனை இக்கட்டான தருணங்களில் மக்களைக் காப்பதற்காகப் போராடி உயிர் துறந்த மாவீரர்களை எப்படி மறந்து போனோம்?
தன்னலமற்ற அந்த தியாகிகளை நினைவில் வைத்துப் போற்றும் விதமாக, ஜூனியர் விகடனில் 'மறத்தல் தகுமோ?' என்று டாக்டர் பா. ஸ்ரீகாந்த் தனது எழுச்சி மிக்க எழுத்தால் நம் கண்ணுக்குள்ளும் நெஞ்சுக்குள்ளும் கொண்டு வந்து நிறுத்தினார்.
இப்போது வெளிவந்திருக்கும் இந்த நூல் வடிவமும் மிகுந்த வரவேற்பைப் பெற்று, இளைஞர்களிடம் தேசிய உணர்வை விதைக்கும் எனபது உறுதி.
-ஆசிரியர்