சிக்கலான ஒரு மத அமைப்பிற்குள் தமிழகம் போன்ற பன்முகப்பட்ட சமூகம் சார்ந்து மக்கள் இருக்கின்ற சூழலில், பெண்களின் பாடுகள் சொல்லிமாளாது. இதற்குள் உழன்றுகொண்டுதான் அப் பெண்களும் பெண்ணியம், இலக்கியம், அரசியல் என்று கடந்துவர வேண்டி இருக்கிறது. அப்படி ஒரு பெண்ணாகவே சாராவும் இருந்துகொண்டு, சக பெண்களின் துன்பதுயரங்களை இலக்கியமாக்கும் பக்குவத்தையும் துணிச்சலையும் எட்டிப்பிடித்திருக்கிறார். சமூகமும் அரசியலும் சேர்ந்த கலவைதான் இலக்கியத்தின் ஆணிவேர். அத்துடன் புனைவு கலந்து படைப்பு வெளிப்படும்போது ரசவாதம் தொடங்குகிறது. அவ்வாறான படைப்பாளி சமூக மாற்றத்திற்கான வித்தாகிறார்கள். மேலும், தன்னுடைய படைப்புக்கும் சுயவாழ்விற்கும் இடைவெளியற்று தன் வாழ்வை அமைத்துக்கொள்பவர்கள் அச்சமூகத்தின் உயிர்மூச்சாகிறார்கள். அப்படியான இடத்தை அடைவதற்கான அனைத்துத் தகுதியும் சாராவிற்கு இருக்கிறது என்பதை அவரின் துடிப்புமிக்க இந்தச் சிறுகதைகள் எனக்கு உணர்த்துகிறது. -தேனி விசாகன்