ஜகன் எனக்கு உங்களை சுமார் 35 வருடத்திற்கு மேலாக தெரியும். கைபிடித்து நடக்க பழகிய காலத்தில், குடும்பத்தைத் தாண்டிய அடுத்த முதல் ஸ்னேகிதம் எனக்கு நீங்கள் தான். உதவியாளர் வேலை எத்தனை கடினம் என்று எனக்கு இன்று வரை பென்ச்மார்க்காக இருப்பது உங்களின் உழைப்பு. நாம் நிறைய தூரம் நடந்திருக்கிறோம் ஜகன். உங்களுக்கு நினைவிருக்கிறதா. ஸ்கூல், சிகரெட் கடை, சைக்கிள் ரிப்பேர், நர்மதா பதிப்பகம், தாயுமானவன் ஷூட்டிங்க் என்று நிறைய தூரம். இன்னும் நிறைய ஞாபகம் வருகிறது. சின்ன வயது வித்யாசம் இருந்தாலும் நட்பு என்கிற கோட்டிலேயே நாம் தொடர்ந்து பயனித்துக்கொண்டிருக்கிறோம். உதிவியாளார், குருவின் சிஷ்யன், குடும்பத்தில் ஒருவர் என்று எத்தனை நம்பிக்கையான உறவுமுறைகளில் நீங்கள் பாலகுமாரனோடு சிக்கிக்கொண்டாலும், நாம் நண்பர்களாகவே இருந்திருக்கிறோம் ஜகன். நீங்கள் தூக்கிவளர்த்த சின்னஞ்சிறிய சூர்யாவிற்கு இன்று தாடி நரைத்துவிட்டது, ட்ரைக்ளிஸரைட்ஸ் அதிகமாகிவிட்டது, சினிமாவில் நீங்கள் பழகிய முட்டல்கள், மோதல்கள் இன்று எனக்கும் பழகி விட்டது. கன்னியாகுமாரி பயனம் முடித்து திரும்பும்போது ஏதோ ஒரு குளத்தில் நீங்கள், நான், பாலா, கோது, இஞ்சிமரப்பா மோகன் என்று நீந்தினோம் நினைவிருக்கிறதா. சினிமா அதைவிட பெரிய ஆழ்குள நீச்சலாக இருக்கிறது ஜகன். அன்று குளித்த ஆனந்தம் இல்லை. அந்த நிம்மதி, விட்டேத்தி இங்கு இல்லை. மாறாக என்னேரமும் ஏதோ ஒரு அலர்ட்னெஸோடேயே இருந்து கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. நான்கு கண்கள், நாற்பது நாக்கு, முன்னூறு மூளை என்று என்னேரமும் ஏதோ யோசனையாகவே இருக்கிறது. சுழல், அலை, ஆழம், கடல் கொள்ளையர்கள் என்று பயமுருத்துகிறது. என்றைக்காவது அள்ளி அனைத்து முத்தம் கொடுத்து சீண்டியும் பார்க்கிறது. ஒவ்வொரு நாளும் பாடமாக்கி புதிய தெளிவு தருகிறது. முன்னைவிட இன்னும் நம்பிக்கை அதிகமாகவே இருக்கிறது. உங்கள் “ நகரும் இரவு” சிறுகதையில் வரும் மதி , குரு என்கிற உதவி இயக்குனர்களைப் படிக்கும் போது எனக்கும் எனக்கும் என்று கேவலாய் நகருகிறது. உங்களின் எழுத்தாளர் முகம் எனக்கு இன்னும் பிடித்திருக்கிறது ஜகன். இன்னும் நிறைய படிக்கவேண்டும். நன்றி: சூர்யா பாலகுமாரன்