பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதின்றேல் மண்புக்கு மாய்வது மன் _ என்பது வள்ளுவன் வாக்கு. பண்புடையவர்கள் இருப்பதால்தான் உலகம் அழியாமல் இருக்கிறது. ஆகவே பண்புடன் வாழ்வதே சீரிய வாழ்க்கை. ஆனால், அது அத்தனை எளிதானதல்ல. நமது புராணங்களும், இதிகாசங்களும் பண்புடன் வாழ்வதற்கு வேண்டிய அரிய பல விஷயங்களை எடுத்துரைக்கின்றன. தவ வாழ்க்கை வாழ்ந்த சமயப் பெரியவர்களும், மகான்களும், ஆன்றோர்களும், சான்றோர்களும் நாம் பண்புடன் வாழ வேண்டிய அவசியத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். சங்கரர் அளித்த சரணாகதி வழியில் ஆரம்பித்து, காப்பியங்களில் இடம் பெறும் சம்பவங்கள் பலவற்றை மேற்கோள் காட்டி பண்பு குறித்து இந்த நூலில் தனித்தனிக் கட்டுரையாக எழுதியிருக்கிறார் நூலாசிரியர் ஆர்.கிருஷ்ணசாமி. ராமன்_சீதை, சீதை_அனுமன் உரையாடல்கள், ஆதிசங்கரரின் வாழ்க்கையில் ஏற்பட்ட சில சுவையான சம்பவங்கள், வியாசர், லட்சுமி, காயத்ரி, பார்வதி ஆகியோரின் மகிமை, கங்கா ஸ்நான மகிமை... ...ராமன் காட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆணையைக் கேள்விப்படும் கௌசல்யை, பரதன், ராமன் ஆகியோருக்கு இடையேயான தர்க்கங்கள்... _ இப்படிப் பயனுள்ள பல விஷயங்கள் இந்த நூலில் இடம் பெற்றிருக்கின்றன. பண்பும் பயனும் பெற இந்த நூல் பாதை அமைத்துக் கொடுக்கும்.