கொலை, களவு, சூது, விபச்சாரம், குடி ஆகியவற்றில் ஒன்று கூட நான் செய்யாது பாக்கி வைக்கவில்லை என்று கூறினார் அவர். ‘அவருடைய தாழ்மையான சீடன் தான் நான்’ என்று கூறினார் காந்தியடிகள். அவருடன் 42 ஆண்டு காலம் இல்வாழ்க்கை நடத்தி இருக்கிறேன், ஆனால் அவர் எப்படிப்பட்ட மனிதர் என்பதை நான் இன்னும் அறியவில்லை என்று மொழிந்தாள் அவருடைய மனைவி சோன்யா பெஹ்ர்ஸ்.
“அதோ பார் உலகிலே எவ்வளவு ஆச்சரியமான மனிதர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் அவரின் முன் நான் ஒரு குழந்தை” என்று பகர்ந்தார் மாநிலம் புகழும் மாபெரும் எழுத்தாளர் மார்க்சிம் கார்க்கி. அவருடைய இறுதி 20 ஆண்டுகளில் உலகிலேயே மிகவும் அதிகமாக மதிக்கப்பட்ட மனிதர் அவர் என்று அவர் மீது புகழ் மாலை தொடுக்கிறது என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா.
இந்த அற்புத மனிதரைப் பற்றியும் அவருடைய தத்துவங்களை பற்றியும் இதுவரை உலக மொழிகளில் 23000 நூல்களும் 56000 கட்டுரைகளும் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் தமிழிலோ அதிகம் இல்லை. எனவே தமிழில் இந்நூல் உருவாயிற்று. இதுகாறும் கூறிக் கொண்டிருந்த அந்த அவர் யார்? அவர்தான்
‘ரஷ்ய ஞானி லியோ டால்ஸ்டாய்’
அந்த மகாத்மாவைப் பற்றிய இந்நூலில், அவருடைய தீய செயல்களையும் நற்பண்புகளையும் என்னால் இயன்றவரை எடுத்து எழுதியுள்ளேன்.
இவ்வாறு இந்நூலின் ஆசிரியர் அப்துற-றஹீம் அவர்கள் தனது முன்னுரையில் கூறியிருக்கிறார்.