தமிழ்ச் சிறுகதை வனத்தில் அறுபதுகளின் நடுவில் ஒரு வித்தியாசமான பூக
விரிந்தது. வாழ்வுப் பாலையின் வெப்பத்தில் உணங்கிப்போன உயிர்களின் குரலைத்
தனதாகப் பேசி, சிறுகதை வனத்தை மணக்கச் செய்தது. யதார்த்த வகைமை என்ற
இலக்கியச் சித்தரிப்புக்கு தலை வாரி, பொட்டு வைத்து, சிங்காரித்து,
கூந்தலுள்ள சீமாட்டியாய் ஆக்கி அழகுசெய்தது இவர் வேலை; எல்லை மீறல் அற்ற
சித்தரிப்பு; மனதைச் சுண்டியிழுக்கும் அளவான உச்சரிப்பு: நம்மோடு
நேரடியாகப் பேசும் வாஞ்சனையான உரையாடல். யதார்த்தவியல் இலக்கிய வகைமைக்கு
கைநிறைய அன்னமிட்டார். வாரி வாரி வழங்கியபோதும், ஒருக்காலும் அவர் "தன்பசி"
போக்கிக் கொண்டவர் இல்லை . நான் இங்கு குறிப்பிடுவது கும்பிப் பசி அல்ல:
அந்தப் பசியும் பூமிமேல் எங்கும் தலைகாட்டக் கூடாது என எழுத்தில் பயணம்
மேற்கொண்டவர் அவர். அங்கீகாரம், புகழ் என்ற தன்பசிக்கு இலக்காகாமல் அவர்
நடந்தது லட்சியப் பயணம்: 'தன்பேர் பாடும் அரும்பசி' அறியாது வாழ்ந்து
நிறைந்தார்.