கன்னட இலக்கியத்தின் முதல் உரைநடை நூல் எனும் பெருமையுடைய ‘வட்டாராதனை’, கி.பி.1180-ல் எழுதப்பட்டது என்று கன்னட இலக்கிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சுகுமார சுவாமியின் கதை தொடங்கி, இளவரசர் சனத்குமாரர், தர்மகோஷர், அபய கோஷ ரிஷி, சாணக்கிய ரிஷி, விருஷபசேனர் ரிஷியின் கதை வரை 19 கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. சமணம் செழித்திருந்த காலகட்டத்தை இதிலுள்ள கதைகள் பிரதிபலிக்கின்றன.
சமண மதத்தின் அறம் சார்ந்த நெறிகளே ஒவ்வொரு கதையிலும் வேரூன்றியுள்ளன. சிவகோட்டாச்சார் மூல கன்னட வடிவத்தில் தந்த இக்கதைகளை, நவீன கன்னட வடிவத்தில் தந்துள்ளார் ஆர்.எல்.அனந்த ராமய்யா. வாசிப்புக்கேற்ற எளிய நடையில், இந்நூல் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. கன்னட இலக்கிய வரலாறு, சமண மத வரலாறு, பத்து நூற்றாண்டுகளுக்கு முந்தைய சமூக வரலாறு என்று பலவகையிலும் இந்த நூல் முக்கியத்துவம் உடையதாகிறது.