கண்முன் காணும் இருப்பினைத் தாண்டி பயணிக்க விழைவிருந்தால்...
இருப்பை இல்லாமலாக்குவதும், இன்மையை இருப்பாக மாற்றுவதும், மாய மற்றும்
யதார்த்த உலகிற்குள் மாறி மாறி நம்மை பயணிக்கச் செய்வதும், எது மாயம்? எது
யதார்த்தம்? என்று புரியாமல் இரண்டின் எல்லையையும் கலைத்துப்போடும் சுழல்
விளையாட்டும், வார்த்தைச்சுழலுக்குள் சுலபமாய் தொலைந்துபோய்விடும்
சௌகர்யமும், இருப்பைக்குறித்த ஆய்வுக்குள் உருவாக்கப்படும் புதிர்களும்,
அவை அவிழ்ந்தும் அவிழாமலும் ஏற்படுத்தும் தவிப்பும் -- இவ்வெழுத்தின்
நிதர்சனம். ஒரு மாய உலகத்தை சிருஷ்டிக்க கற்பனைக்கு அப்பாற்பட்ட
உலகத்திற்கு போகாமல், சாதாரண மக்களின் அன்றாடங்களையும், அவர்களின்
உணர்வுகளுக்குள் விழும் முடிச்சுகளையும் அசாதாரண தருணங்களாக மாற்றி,
இறுதியில் அவற்றைக் கலைத்தும்விடுகிறார் ஆசிரியர். வழுக்கி ஓடும்
வார்த்தைகளைப் பிடித்து அதற்கு அர்த்தம் தேடாமல், அதன்மேல் ஏறி பயணிக்க
வேண்டியது மட்டுமே நாம் செய்ய வேண்டியது. சாந்தினிதேவி