சைவசமயஞ்சார்ந்த ஒவ்வொருவரும் இறை வழிபாட்டில் நிற்றலே மனிதப் பிறவியின் பயனாகும். இறை பணியல் நிற்றற்குச் சிந்தையை உருக்கித் தூய்மை செய்யும் செந்தமிழ்ப் பாடல்கள் நிறைந்த நூல்கள் பலவற்றைக் கடவுள் பக்தியில் திளைத்து முதிர்ந்த அடியார்கள்,யோகிகள்,ஞானிகள் முதலியோர் இயற்றியுள்ளனர். திருக்கடவூர் அபிராமி அம்மையின் திருவருள் பெற்ற ஸ்ரீ அபிராமி பட்டர் இயற்றிய அபிராமி அந்தாதி என்னும் இந்நூலும் அவற்றுள் ஒன்று. இஃது, திருக்கடவூர் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அபிராமியம்மையைத் துதித்துப் புகழ்வது; பக்திச் சுவையைப் பெருக்குவது; காப்புச் செய்யுளுடன் 102 பாடல்களையுடைவது. இந்நூலுக்குப் பலர் உரை எழுதியிருப்பினும் அவை கற்றோர்க்கே மிகப் பயன்படுவனவாம். மற்றையோரும் சிறுவர்களும் சிறுமிகளும் எளிதில் பொருளுணர்வுடன் நாடோறும் பாராயணம் செய்யவேண்டுமென்று எளிய நடையில் தெளிவான பொழிப்புரை, விளக்கம் முதலியன திருச்சிராப்பள்ளி, மலைக்கோட்டு, திருமுறைக்கலைஞர் வித்துவான் தி. பட்டுச்சாமி ஓதுவார் அவர்களைக் கொண்டு எழுதிப் பதிப்பித்தாகும்.