அரும்பெரும் சிறப்புகள் நிறைந்த நளவெண்பா எனும் இந் நன்னூலுக்கு அவ்வப்போது
நல்லிசைப் புலவர்கள் பலர் உரை எழுதியும் பதிப்பித்தும் வெளியிட்டுள்ளனர்.
திருவாளர்கள் டி. சீனிவாசராகவாச்சாரியார், ம. மாணிக்கவாசகம், மே.வீ.
வேணுகோபால் பிள்ளை , எல்லைப் போராட்ட வீரர் மங்கலங் கிழார் முதலியோர்
அவர்களில் சிலர். நளவெண்பா மூலமும் உரையும் கழகப் பதிப்பாகவும்
வெளிவந்துள்ளது. இதற்குக் கழகப் புலவர், செல்லூர்க் கிழார் செ.ரெ.
இராமசாமிப் பிள்ளையவர்கள் மிகவும் கடினமாக உழைத்துப் பதவுரை, கருத்துரை,
விளக்கவுரை என அரியதோர் உரை எழுதியுள்ளார்கள்.
சாதாரண படிப்பாளிகளும் மாணவர்களும் படித்துப் பயன் பெறும்
பொருட்டு நல்ல இலக்கியங்களைத் தெளிவுரையுடன் வெளியிட்டு நற்றமிழ்த் தொண்டு
புரிந்தவர் புலியூர்க் கேசிகன் அவர்கள். அவர்களும் நளவெண்பாவிற்கு அழகிய
தெளிவுரை வரைந்துள்ளார்கள். இவ்விரு சான்றோர்களின் உரைகளை மையமாக வைத்தே
நானும் இந்த அரிய நூலுக்குப் பொழிப்புரை எழுதியுள்ளேன். தமிழறிந்தார்
அனைவரும் எளிதில் கற்கும் வகையில் உரையை மிகவும் எளிய நடையிலேயே
செய்துள்ளேன் என்பதைக் கற்பார் எளிதில் உணர்வர் என்பது ஒருதலை.
அறம் பொருள் இன்பம் வீடடைதல் நூற்பயனே! என்று நம் ஆன்றோர்கள் நூலால் மக்கள் பெறும் பயனைச் சுட்டிச் சென்றுள்ளனர். '