தனிக்குடித்தனம் முப்பது ஆண்டுகளுக்கு முன் ஆனந்த விகடனில் நான் எழுதிய முதல் நாடகம்.
இரண்டு நண்பர்களின் தனித் தனிக் குடும்பக் கதை. கூட்டுக் குடும்பமாக வாழ முடியாமலும் தனிக் குடித்தனம் நடத்த முடியாமலும் சோமு அவதிப்படுகிறான். குடும்ப சூழ்நிலை இதமாக இருந்தாலும், மாமியார் மருமகள் உறவு அருமையாக இருந்தாலும், சூதுவாது அறியாத இள மனைவியின் மனதைக் கெடுத்து, தனிக்குடித்தனம் போக படாத பாடிபட்டு, இறுதியில் படுதோல்வி அடைகிறான் நாராயணன். நாடகம் என்பதைவிட, யதார்த்தமான குடும்பத் தினரின் அப்பட்டமான பேச்சு என்று இதைக் குறிப்பிடுவதே பொருத்தமாக இருக்கும். எதிர்பாராத திருப்பங்களோ, உணர்ச்சிமயமான நிகழ்ச்சிகளோ, பரபரப்பான காட்சிகள் அமைந்த கதைப் பின்னல்களோ, நெஞ்சைப் பிழிந்தெடுக்கும் நாடகத்தனமோ இதில் இடம் பெற வில்லை. ஆனால் நமக்குப் பழக்கமான பாத்திரங்களைச் சந்திக்கலாம். அவர்களது மனப் போராட்டங்களையும் வக்கிரமானச் சிந்தனைகளையும் வேடிக்கையான லட்சிய வேட்கைகளையும் சிரித்துக் கொண்டே படிக்கலாம், ரசிக்கலாம்.