விஞ்ஞானம் அதிகம் வளர்ச்சி அடையாத காலங்களில் மெய்ஞானம் மூலமாக நம் மக்கள் ஆரோக்கியமாக வாழ்திருக்கிறார்கள். தற்போது பிரபலமாகப் பேசப்பட்டு வரும் வாக்கிங் என்னும் உடற்பயிற்சிக்காகவே பண்டைய காலத்தில் கட்டப்பட்ட கோயில்களில் பிரதட்சணம் செய்யும் பிரகாரங்கள் மிகவும் விஸ்தாரமாக அமைக்கப்பட்டிருந்தன.
மார்கழி பஜனையும், கோலமும் இன்னும் நாம் நடைமுறையில் கடைப்பிடக்கப்பட்டு வருவதை பார்க்கிறோம். இதற்குக் காரணம் எல்லோருக்குமே தெரியும். மார்கழி மாத விடியலில் காற்றில் ஓசோனின் அளவு அதிகம் இருக்கும் என்பது. இந்த விஞ்ஞான உண்மையினை நமது முன்னோர்கள் மெய்ஞானம் மூலம் அறிந்திருந்ததால்தான் கடவுளின் பெயரால் மக்களை அதிகாலையில் எழுப்பியிருக்கிறார்கள்.
ஆண்டவன் இருக்கும் இடம் ஆலயம்தான். அதனால் அவனை அங்கேயே போய் வழிபடுவோம் என்று நினைத்துத்தான் பலர் கோயில்களுக்குச் செல்கிறார்கள். ஆனால் கடவுளை வணங்க மட்டுமே ஆலயங்கள் கட்டப்படவில்லை. அந்தக் கால மன்னர்கள் கலைகளை வளர்க்கவும் மக்களுக்கு தர்மத்தின் உண்மையைப் புரிய வைக்கவும், மேலே சொன்ன உடல் ஆரோக்கியத்திற்காகவும் இன்னும் கண்டு பிடிக்கப்படாத பல உண்மைகளுக்காகவும் கோயிலை கட்டினார்கள்.
நம்முள்ளேயே இறைவன் இருக்கும் போது எந்தக் கோயிலிலும்இருப்பானே என்று நாம் ஒரே ஒரு கோயிலுக்குப் போவதுடன் நிறுத்திக்கொள்வதில்லை. பல ஊர்களுக்குச் சென்று கடவுளின் பல உருவங்களை தரிசித்து பரவசப்படுகிறோம். விதவிதமாக வழிபாடுகளைச் (ஆராதனைகள்,) செய்கிறோம். பல பரிகாரங்களைச் செய்து பயனடைகிறோம். வீட்டிலேயும் பூஜைகள் செய்து இறைவனை இறைஞ்சுகிறோம்.
இந்தப் புத்தகத்தில் அபூர்வ ஆலயங்களும் கேள்விப்பட்டிராத சில அர்த்தமுள்ள ஆராதனைகளும், பலன்களும் பல பரிகாரங்களும், பூஜைகளுக்கும் நைவேத்தியங்களுக்குமான சில புதிய விளக்கங்களும் இருக்கும். இவைகளின் ஒரு பகுதியைத்தான் இந்த புத்தகத்தில் தந்திருக்கிறோம். இவைகளைத் தவிர தமிழ்நாட்டில் உள்ள உமக்கியமான இடங்களுக்கு இடையே உள்ள தோராயாமன தூரத்தை ஒரு அட்டவணையாகவே கொடுத்திருக்கிறோம்.
இந்தப் புத்தக்தின் மூலம் படிப்பவர்களுக்கு சிறிய அளவிலேனும் பயன் இருக்குமானால் அதுவே இந்தப் புத்தகத்தின் வெற்றியாக கருதி மகிழ்வோம்.
புஷ்பா ரமணி