மக்கள் சமூகத் தொடர்ச்சிக்குக் காரணம் மக்கட்பேறு. அது இறைவன் கொடுத்த வரம் என்றாலும், குழந்தைப் பேறுக்கும், குழந்தை வளர்ப்புக்கும் துணை நிற்பது மனித அனுபவ அறிவே. அதில் பெற்றோரும் உற்றாரும் பெரும் பங்கு வகிக்கிறார்கள். அது பொது அறிவு அடிப்படையில் அமைந்ததால் புதிய சிக்கல் வரும்போது அவர்களால் ஒன்றும் செய்ய முடிவது இல்லை. சிக்கல் தீர்க்க முடியாமல் உயிர் இழப்புக்கு கொண்டு போய் விட்டுவிடுகிறது. மக்கள் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் அறிவியல் வளர்ச்சி. அதனால் ஏற்பட்ட இரண்டு வளர்ச்சி முக்கியமானவை. 1. நாட்டைத் தாண்டிய உலகளாவிய தொடர்பு; அதனால் வெளிநாட்டில் ஏற்படும் அறிவியல் வளர்ச்சியை நாமும் அறிந்து பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு. 2. மருத்துவத் துறை வளர்ச்சி. சித்த வைத்தியம், ஆயுர்வேதம் என்று நம் நாட்டில் வளர்ந்தது என்றாலும் இன்று ஆங்கில வைத்தியம் உலகு எங்கும் ஆக்கிரமித்துள்ளது. அதன் ஒரு சிறப்பு தொடர்ந்து மருத்துவத் துறையில் முன்னேற்றம் ஏற்பட்டு வளருகிறது: வளர்ந்து கொண்டும் வருகிறது. அதன் ஒரு பலன் மருத்துவத்துக்குள் பல தனித்துறைகள் தோன்றியுள்ளன. இதயம், தோல், பல், பொது மருத்துவம் என்ற நிலையில் குழந்தை மருத்துவத்தில் தனித்துறையே அமைந்துள்ளது. குழந்தை மருத்துவத்துறையில் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டு பொதுமக்களிடையே நல்ல பெயர் எடுத்த மருத்துவர் வைத்திலிங்கம் குழந்தை வளர்ப்பு முறைகள் பற்றி அவ்வப்போது இந்திய மருத்துவக் கழகத்தின் மாத இதழான 'இமைகள்' இதழில் எழுதி வந்துள்ளார். இந்த நிலையில் 'குழந்தை வளர்ப்பும் நலனும்' என்ற இந்த நூல் வெளிவருகிறது. குழந்தை வளர்ப்பில் பல படிநிலைகள் அமைந்துள்ளன. பிறந்த நாள் குழந்தை, ஒரு வாரக் குழந்தை, ஒரு மாதக் குழந்தை, ஒரு வயதுக் குழந்தை எனப் பல நிலைகள் உண்டு. அவை வயதைப் பொறுத்து மட்டும் இல்லை: உடல் வளர்ச்சியையும் உள்ள வளர்ச்சியையும் ஒவ்வொரு நிலையிலும் ஏற்படும் மாற்றம், அப்போது பெற்றோர் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் என்று தனித்தனி இயல்களில் நூலில் விளக்கப்பட்டுள்ளன.