இவருடைய கப்பலைக் கடற்கொள்ளையர்கள் பிடித்துக்கொள்கின்றனர்; தொலைவில் வாழ்கின்ற நெருங்கிய உறவினர் இறந்துபோகிறார்; பெற்றோர் அங்கே சென்றுவிடுகின்றனர்; திருநாளை முன்னிட்டுப் பணியாட்கள் அனைவரும் அவரவர் ஊர்களுக்குச் சென்றுவிடுகின்றனர். இவருடைய மகிழுந்து ஓட்டுநரும் அவரின் துணைவியும் மட்டுமே எஞ்சியிருக்கின்றனர்; எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்ற நிலையில் மனைவியை விட்டுவிட்டுக் கடல்கொள்ளையர்களிடமிருந்து கப்பலை மீட்டெடுக்கச் செல்லவேண்டிய கட்டாயத்தில் சின்ன சமீன்தார் செல்கிறார்; கடும்புயலுடன் அடைமழை பொழிகிறது; மனைவிக்குப் பேறுகால வலியெடுக்கிறது; மகிழுந்தில் ஓட்டுநரும் அவர் மனைவியும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். வழியில் மகிழுந்து மரத்தில் மோதி நேர்ச்சிக்குள்ளாகிறது; அங்கிருந்த குடிசைவாழ் மக்கள் அவர்களைக் காப்பாற்றுகின்றனர். ஓட்டுநர் மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றார்; சின்ன சமீன்தாரின் மனைவி அக்குடிசைப் பகுதியிலிருந்த கிருபையம்மா என்னும் அன்புள்ளம் கொண்டவரின் முயற்சியால் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்கின்றார்; ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண்குழந்தையும் பிறக்கின்றன. இறுதியில், பெருஞ்செல்வந்தரின் குழந்தையைக் குடிசைப்பகுதியில் பிறக்க வைக்கிறார். வறிய ஏழையான ஓட்டுநரின் குழந்தையை சமீன்தாரின் மாளிகையில் பிறக்க வைக்கிறார். இதுதான் இப்புதினத்தின் கதை.
குழந்தைகள் பிறப்புக் குறித்துக் கருத்துக் கூறிய கணியர்களின் (சோதிடர்களின்) உள்ளிட்ட அனைவரின் கூற்றையும் பொய்யாக்கி ‘மாந்தர்கள் நினைப்பது ஒன்று, ஆனால், இறைவன் கொடுப்பது ஒன்று என்ற தன்னுடைய எண்ணத்தை நூலாசிரியர் புதினத்தின் வழியாகச் சொல்லியிருக்கிறார்.
நூலாசிரியர் ஓரு பகுத்தறிவாளரோ, கடவுள் மறுப்பாளரோ அல்லது பொதுவுடைமையாளரோ அல்ல. ஆனால், இவர்கள் எல்லாம் கலந்து வாழ்கின்ற மக்கள் திரளில் ஒருவர். தன்னுடைய வாழ்நாள் பயணப் பரப்பில் அவர் பெற்ற பட்டறிவைக் கொண்டு இப்புதினத்தைப் படைத்துள்ளார்.
இந்நூலில் இயற்கை வேளாண்மை வேண்டும்; எல்லோரிடமும் அன்பு செலுத்தவேண்டும், ஏழை செல்வர் என்ற ஏற்றத்தாழ்வு பார்க்கக்கூடாது; சாதி-மதம் பார்க்கக்கூடாது; மாந்தர் அனைவருக்கும் கடவுள் நம்பிக்கை வேண்டும் என்ற நூலாசிரியரின் எண்ணம் வெளிப்பட்டுள்ளது.
ஒரு புதினம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற வரையறை ஏதுமின்றி உள்ளத்தில் பதிந்துள்ள உண்மையைச் சொல்லியுள்ளார் இந்த எழுபது அகவை முதிய-புதிய எழுத்தாளர். இப்புதினம் ஒரு தாத்தா தன் பேரனுக்குக் கதைசொல்லுவதுபோல் இயல்பாக அமைந்துள்ளது. வாழ்த்துக்கள்.
தோழமையுடன்
புதுவை யுகபாரதி