காலம் 11ம் நூற்றாண்டு. பலமான யோசனைகளுக்குப்
பிறகு திருவிடைமருதூரில் ஆடல் கற்பிக்கும் தலைக்கோலி நக்கன் மதுரவாசகி,
தஞ்சையில் மாமன்னர் இராஜராஜர் கட்டிக் கொண்டிருக்கும் பெரிய
திருக்கற்றளியில் சென்று பணியில் அமர முடிவு செய்கிறாள். ஆனால் தஞ்சையைப்
பற்றிய நினைவுகள் அவளுக்கு பல்வேறு தயக்கங்களைக் கொடுக்கின்றன.அவள்
அறிந்திராத… சில சமயங்களில் அறிய விரும்பாத அவளது பூர்வீக வாழ்க்கை பற்றிய
இரகசியங்களை அங்கு சென்றால் அறிய நேரிடும் என்பதே அந்தத் தயக்கத்திற்குக்
காரணம். என்றாலும் ஏதோ ஒரு பெரும் ஈர்ப்பு உந்தித்தள்ள தஞ்சைக்குச்
செல்கிறாள்.
நாற்திசைகளிலும் விரிந்து பரவி நிற்கும் தஞ்சை மாநகரம்
அவளை இரு கரம் கொண்டு வரவேற்கிறது. அங்கே எழும்பிக் கொண்டிருக்கும் பெரிய
திருக்கற்றளியையும் அதற்காக இரவு பகலாக உழைத்துக் கொண்டிருக்கும் தென்னவன்
மூவேந்த வேளாரையும் அவரது அதிகாரிகளையும் சந்திக்கிறாள் மதுரா. கற்றளியின்
பிரம்மாண்டமான அளவுகளும் அதற்காக எடுக்கப்படும் முயற்சிகளும் அவளுக்கு
பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. திருவாரூரில் முன்பு அவளை ஆற்றுப்படுத்திய
துறவி இப்போது மீண்டும் எதிர்படுகிறார். அவளுக்கு ஆறுதல் அளிக்கிறார்.
இறுதியில் அவளது பூர்வ கதையை உரியவர் மூலம் கேட்டறிகிறாள். தான் யார்
என்பதை உணர்ந்து விக்கித்துப் போகிறாள் மதுரா. உண்மையில் அவள் யார்?அவளது
பெற்றோரின் கதை என்ன? அவளது தந்தை சிறு வயதிலேயே ஏன் அவர்களைத்
தவிக்கவிட்டுச் சென்றார்? அவளது பழங்கதைக்கும் தற்போது நடைபெறும்
சம்பவங்களுக்கும் என்ன தொடர்பு?
பண்டய தமிழகத்தின் சேர சோழ பாண்டி
பண்டலங்களில் நாற்திசைகளிலும் விரிந்து பரவும் பெருங்கதைக்களத்தினூடே
எண்ணற்ற கதாபாத்திரங்களையும் உணர்வுகளையும் உச்சங்களையும் தொட்டு
முன்னேறும் இந்த விறுவிறுப்பான நீள்புதினம், நேயர்களால் விரும்பி
வாசிக்கப்படும் இராஜகேசரி, சேரர் கோட்டை மற்றும் உதயபானு கார்மேகம் ஆகிய
புதினங்களின் தொடர்ச்சியாகும். வாருங்கள்! பாண்டி நாட்டு ஆபத்துதவிகளும்
சோழ நாட்டு வீரர்களும் தத்தம் வாட்கள் விற்கள் கேடயங்களுடன் இரவு பகலாக
முட்டி மோதும் அந்தக் காலத்திற்குள் நுழைவோம்…. சளாங்! சளாங்! பளாங்!
பளாங்!