'ஊனமொன்றறியா
ஞானமெய்ப்பூமி', 'வானவர் விழையும் மாட்சியார் தேயமாகிய' இப்பாரத பூமியில்
எத்தனையோ மகான்கள் அவதரித்திருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் உள்ள சிறப்பை
விட, ஆதி சங்கர பகவத் பாதருக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. உலகுக்கெல்லாம்
ஞான ஒளி காட்டிய நம் தாயகம் தடம் புரண்டு தத்துவ ஞானக்கலைகள் மறந்து
இருட்டில் தடுமாறித் தத்தளித்த ஒரு காலமும் இருந்தது. அப்படிக் காரிருளில்
இப்புண்ணிய பாரத பூமி மூழ்கி இருந்த காலத்தில்தான், பகலவன் போல உதித்து
அத்வைதம் எனும் அற்புத சித்தாந்தத்தை அளித்து நமக்கெல்லாம் ஒளியும் வழியும்
காட்டிய மஹாபுருஷனே ஆதிசங்கரர்.
அடிமைத்தளையில் சிக்குண்டிருந்த தமிழ் மக்களை தன்பாட்டால் தட்டி
எழுப்பிய மகாகவி பாரதி, ஆதிசங்கரரின் அத்வைத தத்துவத்தினால்
ஈர்க்கப்பட்டவர்.