அப்பர், ஸம்பந்தர், ஸுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் ஆகியவர்களுடைய தேவாரத் திருப்பதிக ஏடுகளைச் சிதம்பரத்திலிருந்து கண்டெடுத்துக் கொண்டு வந்து லோகத்துக்கெல்லாம் கொடுத்த பரம உபகாரி ராஜராஜன் தான். அவன் இல்லாவிட்டால் நம் தமிழ்த் தேசத்தின் பக்திப் பண்பாட்டுக்கே மூச்சாக இருக்கிற தேவாரம் இல்லை; எல்லாம் கரையான் அரித்து மட்கி மண்ணாகியிருக்கும். இதனால் “திருமுறை கண்ட சோழன்” என்றே அவனுக்கு ஒரு பெயர்.
சிதம்பரேச்வரனான நடராஜாவிடத்தில் அவனுக்கு அபார பக்தி. ‘நடராஜா’ என்ற பெயரைத் தமிழில் ‘ஆடவல்லான்’ என்று அப்பர் அழகாகச் சொல்லியிருப்பது அவன் மனஸை ரொம்பவும் கவர்ந்திருக்கிறது.