தமிழ் அறிஞனாக இருந்த நான் ஆன்மீகத் துறையிலும் அடியெடுத்து வைக்க காரணமாக இருந்தவர், மகரிஷிமகேஷ் யோகி ஆவார். இவரது ஆன்மீகம் வெறும் பக்தி என்ற சின்ன வட்டத்திற்குள் நின்றுவிடாமல் மனிதன் மகிழ்ச்சியாக வாழத் தேவை எவை என்ற ஆய்விலும் சென்றது. அவற்றில் மிக முக்கியமானதாக அவர் எண்ட நிலைதான் ஆழ்நிலைத்தியானம். ஆழ்நிலைத்தியானம் என்பது மனதை ஒரு நிலைப்படுத்தி ஒன்றின் மேல் நிலைக்க விடுவதாகும். இந்த ஆழ்நிலைத்தியானத்தை மேற்கொள்ள விசேச அறிவோ, கூடுதல் திறமையோ தேவையில்லை. ஆர்வமும் சிறிது முயற்சியும் இருந்தாலே போதும், கைவந்த கலையாகிவிடும். வாழுங்கலை என்ற தலைப்பில் முன்பு ஒரு நூல் எழுதினேன். அது இன்னும் சிறிது விளக்கதாக இருந்தால் நல்லது என நண்பர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இந்த நூல் அக்குறையை போக்கும் என நம்புகிறேன். தியானத்தின் அவசியம் பற்றி பாமர மக்களும் சிந்திக்கத் துவங்கியிருக்கும் இச்சூழ்நிலையில் இந்த நூல் தக்க வழிகாட்டியாக அமையும் என்று நம்புகிறேன்.
அன்பன் தெ.பொ.மீ.