உலகில் பிறந்த மனிதர்கள் நன்றாக வாழ்ந்து சிறப்பாக செயல் ஆற்றி பெருமைதேடி புகழுடம்பு எய்த வேண்டும். வாழ்க்கையில் வெற்றி அடைய மனிதனுக்கு உடல், மனம் இரண்டும் தூய்மையானதாக தகுதியுடன் இருக்க வேண்டும். ‘மனமது மந்திரம் செபிக்க வேண்டாம்!' என்பது போல், உடலும் மனமும் உறுதியானதாக, ஆரோக்கியமாக அமைவதற்கு நம் சான்றோர்கள் காட்டியிருக்கும் கலை யோகாக் கலையாகும்.
நம் உடல் - மனம் - ஆன்மா நாம் இங்கு வாழும் காலத்தில் அறிய வைப்பதே யோகா கலை. நம் வாழ்வில் எதையும் தாங்கும் இதயம் பெற வேண்டும். நோயற்ற உடலால் வெற்றி பெற முடியும். உடம்பை நல்வாழ்விற்கு ஏற்றாற்போல் வைப்பதற்கு இயற்கை தந்துள்ள வரமே யோகா கலையாகும். மன உளைச்சலால் வரும் நோய்களே அதிகம், அந்த மன உளைச்சல் இல்லாமல் வாழ 'யோகா' துணை செய்யும். நாம் இங்கே அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் முக்கிய யோகாசனங்களை நாள்தோறும் செய்து வந்தால் உள, உடல் நலம் பெறும்.
இயற்கையே நமக்குத் தந்த மற்றொரு சிறந்த செல்வம் மூலிகைகளாகும். 'உணவே மருந்து, மருந்தே உணவு' என்பதற்கு ஏற்ப அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் மூலிகைகள், கீரைகள், காய்கறிகள், பழங்கள் முதலியவற்றின் பயன் அறிந்து உணவில் பயன்படுத்தினால் இயற்கையிலேயே நோய் எதிர்ப்பாற்றல் மிகுந்து உடல் நலம் பெறும். அந்த வகையில் இங்கு இயற்கை மூலிகைச் செல்வங்களைப் பற்றிய செய்திகளை வழங்கியிருக்கிறோம்; அதையும் கற்று இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் வாழ்வில் வெற்றி நிச்சயம்.
இந்நூலிற்கும் தமிழ் மக்கள் எப்போதும்போல் ஆதரவு தருமாறு வேண்டுகிறோம்.