'உதிர்ந்த இலைகளின் பாடல்' என்ற தொகுப்பில் இருப்பது வெறும் கவிதைகள் அல்ல; இங்குமங்கும் வானத்தில் அலைகின்ற மேகங்கள்; மதுக்கோப்பையில் வழிகின்ற நிலவொளி; மௌனத்தைக் காலமெல்லாம் பேசிக்கொண்டு உயர்ந்து நிற்கின்ற மலைகள்; ஓடிக்கொண்டே இருக்கின்ற காலத்தின் நதி; தன் வாசனையை அனுப்பிக்கொண்டே இருக்கும் வண்ண வண்ண மலர்கள்.
இத்தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கவிதையிலும் மென்மையான ஓர் உணர்வோ, இயற்கையின் பேரெழிலோ, சின்ன வாழ்க்கையோ, உறவின் இனிமையோ அல்லது கசப்போ, நம் சூழலுக்கு நெருக்கமாகச் சொல்லப் பட்டிருக்கிறது.
ஒரு தேர்ந்த வாசகனால், இக்கவிதையின்மூலம் சீனாவின் நிலப்பரப்பை யும் வாழ்க்கையையும் உணரமுடியும். கல்பனாவின் மொழிபெயர்ப்பில், உண்மையில் 'சீனம்' கரைந்து, தமிழ் வாழ்க்கை விரிவதுபோல் எனக்குத் தோன்றுகிறது.
- பா. இரவிக்குமார்