மூன்றாம் உலக நாடுகளிலிருந்து வருகிற ஒரு மனிதனுக்கு கதைகள் எழுத மன அமைதி எப்படி கிடைக்கும்? அதிருஷ்டவசமாக கலை தாரளமாகவும் கருணையோடும் இருக்கிறது. பிரச்சனைகளற்ற சந்தோசங்களை மட்டும் கலை ஆகர்ஷிப்பதில்லை, துன்பத்தில் உழல்பவர்களை அது நிராகரித்து ஒதுக்குவதுமில்லை. அவரவர் நெஞ்சிற்குள் பொங்கும் உணர்வுகளை அவர்களுக்கே உரித்தானதொரு தனிமுறையில் வெளிப்படுத்திக் கொள்ள கலை அனுமதிக்கிறது.”
- தனது நோபல் பரிசு ஏற்புரையில் ‘நாகிப் மாஃபஸ்.
கதைகளை கேட்பதைப் போல் வாசிப்பதைப் போல் எழுதுவதும் மகத்தான ஆறுதலைத் தருவதால்தான் எழுத்தின் மீதான வசீகரமும் மயக்கமும் குறையாமல் இருக்கிறது. ‘கதை சொல் அல்லது செத்து மடி’ என அரேபிய இரவுகளில் வேதாளம் கேட்பதுபோல் யாரேனும் நம் தலையை உலுக்கிக் கொண்டே இருந்தால் அதை ஆசிர்வாதமென்பேன். கதைகள் ஒரு சமூகத்தின் அகவுலகிற்குள் நுழைந்து பார்க்க உதவும் கதவுகள். அதனால்தான் வாழ்வின் மூலம் நாம் கண்டடையும் உண்மைகளை விடவும் எழுத்தின் வழி கண்டடையும் உண்மைகள் காலம் கடந்து நிற்கின்றன.