மெல்லக்கண் விழிக்கும் ஞாபகங்களையும் அழுத்தத்தை உதறி அவிழும் கம்பிச் சருளென வளைய வரும் நினைவுகளையும்
ஊசலாடும் மனக்கோலங்களையும் பழத்தைக் கருவில் வைத்திருக்கும் பூவைத்தோல் மெல்லிய மொழியில் கனமானச் சொல்கின்றன செல்வநாயகியின் கவிதைகள். கவிதைகளைப் படிப்பதில் எனக்கிருந்த ஆர்வம் எழுதுவதில் எளிதாக ஏற்ப்படவில்லை. கல்லூரிக்காலம் என்னை இலக்குய மேடைகளுக்கு அழைத்துச் சென்றது என்றாலும் அங்கு என்னை ஒரு பேச்சாளராகவே அறமுகப்படுத்தி வைத்திருந்தது. 2002 திருமணம் முடிந்து 2003 கணவரின் பணி நிமித்தமாக அமெரிக்கா வாழ்க்கையை மேற்கொள்ள நேர்ந்தபோது என் பயணம் ஒட்டுமொத்தமாக மாறிப்போனது. இலக்கியங்கள், மேடைகள் என்று இங்கு என் தாய்மொழி தந்த கொடையில் வாழ்ந்தவள், தமிழ் பேச முடியாத அந்நாட்டில் என் மொழியைத் தொலைத்த அகதியானேன். திடீரென ஏற்பட்ட இம்மாறுதல் என் தேடலை மேலும் தீவிரப் படுத்தியது. கணினி வாகனம் மூலமாகவும் தமிழ் பயணிக்கத் துவங்கியிருக்கும் இனிப்பான செய்தி அறிந்து மகிழ்ந்தேன். மழைப்பெய்த மறுநாள் எப்படியோ உற்பத்தியாகி ஊர்ந்துவரும் அட்டைப் புழுவினம் போல் வழ்வும் ,மனிதர்களும் இயற்கையும் என்னுள் ஏதாவதொரு அதிர்வையோ, ஆச்சரியத்தையோ ஏற்படுத்தும் தருணத்திற்கு அடுத்த கணம், என் மனம் ஒரு கவிதைக்கான கருவைச் சமக்கத் தொடங்கும். சுமக்கும் வரைதான் அது எனக்குச் சொந்தம். எழுதி முடித்த பின் எல்லோருக்கும். கவிதைகளை இனி வாசகர்களாகிய உங்கள் கரங்களில் ஒப்படைக்கிறேன். உங்கள் விமர்சனங்கள் என் வேருக்கு உரங்கள் , வாசியுங்கள் , விமர்சியுங்கள்.
- பிரியமுடன் செல்வநாயகி.