ஆறு வகை மதத்தைச் சேர்ந்தவர்களும் ஒரு பொருளின் இயல்பை இன்னது என்று, ஒரு மதத்தைச் சார்ந்தவர் கூறினால், ஏனைய மதத்தவர் அனைவரும் அக்கூற்றை மறுத்து வேறு ஒரு பொருளைக் காட்டுவார்கள். ஆனால் திருவள்ளுவரோ, தம் மறைநூலாகிய முப்பாலில் சொன்னவை எல்லாவற்றையும் அனைத்து மதத்தினரும் எவ்வித மறுப்பும் இன்றி உண்மை என்று ஒத்துக் கொள்வார்கள்.சமயங்களால் மக்களுக்கு அன்பும், அமைதியும் நன்மையும் கிடைப்பதற்குப் பதில், ஒற்றுமை கெட்டு துன்பங்களும் தொல்லைகளுமே இன்று பெருகி வருவதை நாம் கண்கூடாக்க் காண்கிறோம். சாதி, சமயச்சண்டைகளால் மனித குலத்தின் உயிருக்கும் உடைமைக்கும் பெருத்த நாசம் விளைந்து கொண்டிருப்பதை ஒவ்வொரு மணித்துளிலும் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். சமயங்கள் இன்று மனித சமுதாயத்தின் ஒற்றுமையைக்குலைத்து, மனிதர்களை ஒருவருக்கொருவர் பகைவர்களாக ஆக்கிக் கொண்டிருக்கின்ற என்பதுதான் உண்மை. ஆனால், தெய்வப் புலவரின் தமிழ் மறையோ எக்காலத்திற்கும் பொதுவான - மனித சமுதாயம் முழுமைக்குமான ஒரே மறையை, எவ்விதப் பாகுபாடும் இன்றிப் போதிக்கின்றது.
திருவள்ளுவர் வாழ்ந்த காலத்திலேயே சமயமும் சாதியும் வேரூன்றி இருந்தாலும், சாதி சமயத்திற்கு அப்பாற்பட்டவராக
திருவள்ளுவர் வாழ்ந்திருக்கின்றார் என்பதற்கு, அவரின் குறள்பாக்களே சான்று பகர்கின்றன. எங்கும் நீக்கமற நிறைந்த முதலும்
முடிவுமற்ற -சர்வ்வியாபியான பரம்பொருளையே அவர் ஏக இறைவனாக வணங்கியிருக்கிறார் என்றும் அறிய முடிகிறது. அத்துடன், மனித சமுதாயம் ஒட்டு மொத்தமும் ஒரே மனித மதத்தில் நின்று, எங்கும் நிறைந்த பரம் பொருளான இறைவனை மட்டுமே வணங்கி, அவனைச் சரணடைந்து விடுவதன் மூலமே இறைவனைக் காணவும், பிறப்பு-இறப்பு அற்ற வீடுபேற்றை அடையவும் முடியும் என்பதனை அழுத்தந் திருத்தமாக ஜயத்திற்கு இடமின்றிக் குறள் பாக்களின் மூலம் தெளிவுபடுத்தி உள்ளார்.
- மாமூலனார்.