வாழ்க்கை சதுரங்கத்தின் மாயக்கட்டங்களில் முன்னேறிச் சென்று ஜெயிப்பதுதான் மனிதர்களின் லட்சியமாக இருக்கிறது. இந்தப் புதிர்ப் பயணத்தில் சோர்ந்துவிழும் ஒவ்வொரு தருணத்திலும் கடவுளைத் துணைக்கு அழைத்துக்கொள்கிறோம். இதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையின் பாதையில் செல்லும் எல்லோருக்கும் முழுமையான திருப்தி கிடைத்து விடுவதில்லை. ஆனால், சதுரகிரிக்கு யாத்திரை வருகிறவர்கள் புதுமையான அனுபவத்தைப் பெறுகிறார்கள். சந்தன மகாலிங்கத்தையும் சுந்தர மகாலிங்கத்தையும் தரிசிப்பதில் கிடைக்கும் பரவசத்தைத் தாண்டி, இந்த மலையில் உலாவிய, இந்த மலையை மகத்தான புனித பூமியாக மாற்றிய எண்ணற்ற சித்தர்களின் ஆசியும் அவர்களுக்குக் கிடைக்கிறது. இங்கு வந்து சென்றதால், வாழ்வில் இனிமையான திருப்பங்களைச் சந்தித்தவர்கள் எத்தனையோ பேர். இறையருளின் மகத்துவத்தை, இறைவனோடு நடந்து செல்லும் பரவசத்தை இந்த யாத்திரையில் அனுபவிக்கலாம். சித்தர்களின் ரசவாத வித்தைகள், அமானுஷ்யத் தன்மையோடு நிகழ்ந்த அற்புதங்கள், உயிரை ஊடுருவிச் செல்லும் உண்மைக் கதைகள், வாழ்க்கையின் புதிர் முடிச்சுகளை அவிழ்க்கும் அதிசய அனுபவங்கள் என எல்லாம் தரும் யாத்திரை அது. சதுரகிரியின் ரகசியங்களைச் சொல்லும்விதமாக ‘தினகரன் ஆன்மிக மலர்’ இதழில் தொடராக வெளிவந்து, லட்சக்கணக்கான வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற இந்தத் தொகுப்பு, நூல் வடிவம் பெற்று பல பதிப்புகளைத் தாண்டி விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. பக்திப் பரவசத்தில் திளைக்க விரும்புவோர்க்கு பயனுள்ள நூல் இது