துண்டுபட்டு கிடந்த ராஜ்ஜியங்களை இணைத்த இந்தியாவின் இரும்பு மனிதர்
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினம் இன்று நாடு முழுவதும்
கொண்டாடப்படுகிறது.குஜராத்தில் 1875ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி விவசாயக் குடும்பத்தில்
பிறந்தார் சர்தார் வல்லபாய் படேல். சிறு வயது முதலே படிப்பில் சிறந்த
மாணவராக விளங்கினார். வழக்கறிஞராக வேண்டும் என்ற தாக்கத்தில் இருந்த அவர்,
தனது 25 வயதில் 'டிஸ்ட்ரிக்ட் பிளீடர்' படிப்பை முடித்து கோத்ராவில்
வழக்கறிஞராக தொழில் செய்யத் தொடங்கினார். பின்னர் 1910ஆம் ஆண்டு லண்டன்
சென்று பட்டம் படித்து முதல் மாணவராக தேர்வானார். பிறகு நாடு திரும்பிய
அவர் அகமதாபாத்தில் வழக்கறிஞராக பணிபுரியத் தொடங்கினார்.
அதனைத்தொடர்ந்து காந்தி நடத்திய பல போராட்டங்களில் தன்னை முதன்மையானவராக
ஈடுபடுத்திக்கொண்டார். இரண்டாவது வட்டமேஜை மாநாட்டு தோல்விக்குப் பிறகு
மகாத்மா காந்தி, படேல் கைது செய்யப்பட்டு, எரவாடா மத்திய சிறையில்
அடைக்கப்பட்டனர். அப்போது முதல் காந்தியுடன் படேலுக்கு நெருக்கம் ஏற்பட்டு
பின்னர் அது வளர்ந்தது. 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் முதல் துணை
பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். அப்பதவிகளில் அவர்
ஆற்றிய பணிகள் அத்தனை சாதாரணமானது அல்ல.