தஞ்சை மண்ணின் பழக்க வழக்கங்கள், திருமண உறவுமுறைகள், சாதியில் அதன் வெளியிலும் இருக்கும் ஏற்றதாழ்வுகள், பண்பாட்டு தொடர்புகள், எல்லாவற்றையும் அவரது நாவல்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பேசிவிடுகின்றன.
வளமையான பகுதியில் வாழும் மக்கள் வளமையற்ற பகுதியில் இருக்கும் மனிதர்களுடன் தங்கள் 'உறவுமுறைகளை' சில அனுபவங்களினால் நிறுத்தும்போது கொஞ்சம் கொஞ்சமாக உருமாறி ஊர் கட்டுபாடாகவே அது மாறிவிடுகிறது. சாதியின் உட்பிரிவினருக்குள் இருக்கும் பிரச்சனையாக மாறிவிடுகிறது. உயர்வு தாழ்வு அதில் முளைத்து வேர் கொண்டுவிடுகிறது. அதன்பின் அந்த வழக்கத்தை கடைபிடிக்க ஊர் பெரிய மனிதர்கள் தங்கள் கெளரவத்தை காக்க எந்த பாடிற்கும் தயாராகிவிடுகிறார்கள். உறவுமுறைகள் என்பது கல்யாணம், சாவு, போன்ற எல்லா பழக்கங்களிலிருந்து திருவிழா, கொடை போன்ற சம்பிரதாயங்கள் வரை அது பரவிவிடுகிறது. கிட்டதட்ட இது எல்லா சாதி சமூகங்களிலும் காணக்கூடியது.
கறிச்சோறு என்கிற அவரது நாவலில் தன் சமூகத்தில் நிலவும் இந்த பழக்கவழக்கங்களை எதார்த்தமாக சொல்லிவிடுகிறார்.