களிமண் தன்மை கொண்ட நிலத்தில்தான் குட்டை அமைக்க வேண்டும். காரணம், இந்த நிலத்தில்தான் தண்ணீர் தேங்கி நிற்கும். ஒரு வேளை இந்த நிலத்தின் தன்மை பற்றி தெரியவில்லை என்றால், குட்டை அமைக்க திட்டமிட்டுள்ள நிலத்தில் ஒரு எளிய பரிசோதனையை நீங்களே செய்யலாம். அதாவது, 1 மீட்டர் நீளம், அகலம், ஆழத்தில் குழி எடுக்கவும். அதில் நீரை நிரப்பவும். உடனே நீர் வற்றிவிட்டால், அந்த நிலம், குளம் அமைக்க ஏற்றது அல்ல என்று புரிந்து கொள்ளலாம். தண்ணீர் தேங்கி நின்றால், தயங்காமல் குட்டை அமைக்கலாம்.சூரிய வெளிச்சம் தாராளமாகக் கிடைக்கக்கூடிய பகுதியில் இறால் குட்டை அமைக்க வேண்டும். அப்போதுதான் ஒளிச்சேர்க்கை சிறப்பாக நடைபெற்று, இறாலுக்குத் தேவையான இயற்கையான உணவு தடையின்றி உற்பத்தியாகும். நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதாக இருந்தால், கார-அமிலத்தன்மையின் அலகு 7 பி.ஹெச். முதல் 8.5 பி.ஹெச். அளவுக்குள் இருக்க வேண்டும். இதை அறிந்து கொள்ள நீர்ப் பரிசோதனை செய்வது கட்டாயம். ஆற்று நீராக இருந்தால், கார-அமிலத்தன்மையைப் பரிசோதிக்க வேண்டியதில்லை.