ஸ்ரீ நாகநாத சுவாமியின் ஊழியன் என்று தம்மைப் பறைசாற்றிக் கொண்ட தெய்வீகப் பணியாளர் ஸ்ரீ பாடகச்சேரி சுவாமிகள். ஓரிடத்தில் தங்காமல் ஊர் ஊராகச் சுற்றித் திரிந்த மகான் இவர். நான் மறைந்தாலும் என்னை நம்பியிருப்பவர்களுக்கு நான் என்றும் துணையாக இருப்பேன். என்னை நம்பாதவர்களுக்கும், நம்பிக்கை வரும் பொருட்டு உதவிகள் செய்து வருவேன்... என்று அன்பர்களிடம் கூறி வந்த பாடகச்சேரி சுவாமிகள் ஆற்றிய அரும்பணிகளை ஆன்மிக உலகம் ஒருபோதும் மறக்க முடியாது. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்... என்ற வடலூர் ராமலிங்க சுவாமிகளின் சிஷ்ய பரம்பரையில் வந்தவராகக் கருதப்படும் பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள், நலிவடைந்த கோயில்களைக் கண்டபோதெல்லாம் வாடினார். ஊராரிடமிருந்து யாசகமாகப் பணம் வசூலித்து, அதைக் கொண்டு கோயில்களுக்குத் திருப்பணி செய்து கும்பாபிஷேகமும் நடத்தினார். இப்படிப்பட்ட பெருமைகள் வாய்ந்த மகான் பாடகச்சேரி சுவாமிகளின் வாழ்க்கைக் கதையை தனக்கே உரிய எளிய நடையில் தொகுத்துத் தந்திருக்கிறார் நூலாசிரியர் பரணீதரன். சுவாமிகளுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்களை சந்தித்து, அவர்களுடைய அனுபவங்களைக் கேட்டறிந்து இந்த நூலில் இணைத்திருக்கிறார். சுவாமிகளைப் பற்றி அவரின் பக்தர்கள் சிலர் எழுதியிருக்கும் உணர்வுபூர்வமான கடிதங்களும் இதில் இடம் பெற்றிருக்கின்றன பாடகச்சேரி, நாகேஸ்வரம், சென்னை நகரில் உள்ள திருவொற்றியூர் மற்றும் கிண்டி பகுதிகளில் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும், அவை தொடர்பான குறிப்புகளும் இந்த நூலின் இறுதி அத்தியாயத்தில் இணக்கப்பட்டுள்ளன.