தேவதானப்பட்டி, தேவதானப்பட்டி பகுதியில் கம்பு உள்ளிட்ட குறுகிய கால பயிர்கள் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. இதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பணப்பயிராக கருதப்படும் கரும்பு, வாழை சாகுபடி செய்தால் பத்து மாதங்களுக்கு பிறகு தான் பலன் கிடைக்கும். மேலும் கூடுதலான நீர் தேவைப்படும். சில ஆண்டாக தேனி மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. நீர் நிலைகள் அனைத்து வறண்டுள்ளன. 70 சதவீத விவசாயப்பணிகள் முடங்கியுள்ளது.
இந்நிலையில் பெரியகுளம் பகுதியில் தேவதானப்பட்டி அருகே மேல்மங்கலம், ஜெயமங்கலம், சங்கரமூர்த்திபட்டி, குள்ளப்புரம், சில்வார்பட்டி கிராமங்களில் தட்டைப்பயறு, வெண்டை, கத்தரி, சின்ன வெங்காயம், கம்பு போன்ற குறுகிய காலப்பயிர்களின் சாகுபடி பரப்பளவு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
பயிரிட்ட 45 நாட்களில் இருந்து 90 நாட்களில் பலன் கிடைக்கிறது. இப்பகுதியில் விளைகின்ற பொருட்களை ஆண்டிபட்டி, தேனி,பெரியகுளம் மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
மாட்டு தீவனங்களுக்கு கம்பு தேவை அதிகரித்துள்ளது. கட்டுபடியான விலை கிடைத்து வருகிறது. இதனால் குள்ளப்புரம், பொம்மிநாயக்கன்பட்டி கிராமங்களில் கம்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
சில்வார்பட்டி விவசாயி ராமச்சந்திரன் கூறுகையில், '' விதைத்து 90 நாளில் கம்பு அறுவடை கிடைக்கிறது. நீரின் தேவையும் குறைவாக உள்ளது. ஒரு குவிண்டால் (100 கிலோ) ரூ.4,000 முதல் ரூ.5,000 வரை விற்கப்படுகிறது. நல்ல விலை கிடைப்பதால் ஆண்டிற்கு மூன்று முறை சாகுபடி செய்கிறோம்,'' என்றார்.