இவ்வையகத்தின் மூலக்கூறாம் குடும்பம் என்பதின் மாண்பு பற்றியும், மணம்புரிந்தார் ஆற்றும் நல்கடமைகள் பற்றியும் ஆழச் சிந்தித்து அழகு தமிழில், புனை உவமை எழிலுடன் பாவேந்தன் படைத்திட்ட தமிழ்க் காப்பியம்! இந்நூல் புதுமணமக்களுக்கோர் கைவிளக்கு! தலைவனிடம் தலைவி நடந்துகொள்ள வேண்டிய சிலவற்றைத் தலைவன் அன்பு காரணமாகச் சொல்லப் பின்வாங்குவது உண்டு. அவ்வாறே தலைவியும் பின்வாங்குவது உண்டு. அப்படிச் சொல்ல வேண்டிய சிற் சிலவற்றைக் குடும்ப விளக்குச் சொல்லும், நல்ல இல்லறத்திற்கான இலக்கணக் கையேடு! புதுக் குடும்பத்தின் குறிப்பேடு! என்றெல்லாம் புகழப்பட்ட இந்நூல் பாவேந்தரின் படைப்புகளில் தனிச்சிறப்புப் பெற்றதாகும். ஒவ்வொரு தமிழ்க் குடும்பத்திலும் இருக்க வேண்டிய, கணவரும் துணைவியும் படித்தறிய வேண்டிய நூல் இது.